பழமொழிகளை வைத்து விமர்சிப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கும் அமைச்சர் ஜெயக்குமார்!
அமைச்சர் ஜெயக்குமார் அடுத்தவர்களை விமர்சிக்கும் போது பழமொழிகளை கூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் அடுத்தவர்களை விமர்சிக்கும் போது பழமொழிகளை கூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். பழமொழிகளை கூறி விமர்சிப்பதை தனது பாணியாகவும் வைத்துள்ளார் ஜெயக்குமார். தனக்காக தனி இடத்தை உருவாக்க அவர் இவ்வாறு பேசி வருகிறார் என கூறப்படுகிறது.
ஜெயலலிதா இருந்தவரை பிரஸ் பக்கமே திரும்பாத அமைச்சர்களும் அதிமுக நீர்வாகிகளும் அவரது மறைவுக்குப் பிறகு அடிக்கடி மீடியாக்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு அதிமுகவினர் செய்தியாளர்களை சந்திப்பது பல மடங்கு அதிகரித்து விட்டது.
அதிமுக நிர்வாகிகள் பலர் நள்ளிரவிலும் கூட செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். அதிமுகவின் இரு அணியினரும் ஒருவரை ஒருவர் கூறவே அடிக்கடி செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.
ஜெ.பாணியில் ஜெயக்குமார்
இந்நிலையில் ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பின் போதும் அமைச்சர் ஜெயக்குமார் ஏதாவது ஒரு பழமொழியை கூறி, அதனை சுட்டிக்காட்டி எதிரிகளை விமர்ச்சித்து வருகிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா நிர்வாகிகளுடனான கூட்டத்தின் போது குட்டிக்குட்டி கதைகளை கூறுவார்.
அதேபோல் பழமொழிக் கூறி அதையே தனது பாணியாக்க ஜெயக்குமார் முயற்சிக்கிறார். இதுவரை அமைச்சர் ஜெயக்குமார் கூறிய சில பழமொழிகளை பார்க்கலாம்..
பூனை கண் மூடிவிட்டால்
6 மாதத்தில் அ.தி.மு.க. ஆட்சி கலையும் என்று கூறிய திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு 'பூனை கண் மூடிவிட்டால் உலகமே இருண்டு போய்விட்டது' என்று பழமொழி சொல்வார்கள். அதை போல திமுகவினர் பகல் கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள் எனக் கூறினார் ஜெயக்குமார்.
ஓட்ட படகை உப்பு வைத்து..
ஓபிஎஸ் அணியின் செம்மலை 35 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளனர். 15 அமைச்சர்கள் ஆதரவு தெரவித்துள்ளனர் என்று கூறியது தொடர்பாக பதிலளித்த ஜெயக்குமார், சொல்வதை நினைக்கும் பொழுது பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது 'ஓட்ட படகை உப்பு வைத்து அடைத்தார்களாம்' என்றார்.
சிறு துரும்பும்..
இரு அணிகள் இடையேயான பேச்சுவார்த்தை எந்த நிலையில் இருக்கிறது?
என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார் எல்லோரையும் அரவணைத்து செல்லக்கூடிய அந்த மனப்பக்குவத்துடன் தான் கட்சியிலும், ஆட்சியிலும் ‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என்ற அடிப்படையிலும், யாரையும் இழக்கக்கூடாது என்ற அடிப்படையிலும் பேச்சுவார்த்தைக்கு கதவுகள் திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது என்றார்.
கூரை ஏறி கோழி பிடிக்க..
மூன்றாந்தர அரசியல்வாதியை போல ஜெயக்குமார் பேசுவதாக கூறிய கேபி.முனுசாமிக்கு ஜெயக்குமார் பதிலளித்தார். அப்போது கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா? என்று சுட்டிக்காட்டினார்.
ஆட்டைக் கடித்து, மாட்டைக்..
சின்னம் முடக்கப்பட்டது குறித்த கேள்விக்க ஜெயக்குமார் பதிலளித்தார். அப்போது ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து பின் மனிதனைக் கடித்தது என்ற பழமொழிக்கு ஏற்ப முதலில் கட்சியிலிருந்து பிரிந்து, பின் சின்னம் முடக்கப்பட்டு, இப்போது ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கிறார்கள் ஓபிஎஸ் அணியினர் என்று கூறினார்.
அமாவாசை இருட்டில் பெருச்சாளி..
இந்நிலையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசனையும் ஜெயக்குமாரையும் நீக்க வேண்டும் என மதுசூதனனின் கருத்துக்கு ஜெயக்குமார் பதிலளித்தார். அப்போது அமாவாசை இருட்டில் பெருச்சாளி புகுந்ததாம் என்ற பழமொழியை சுட்டிக்காட்டினார்.