அரசியல் என்பது முள்படுக்கை- கமல் சும்மா வெளியே நின்று பேசக் கூடாது... அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு
சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தபோது கமல் ரசிகர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் சுனாமி வந்தபோதும் , சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போதும் கமல் ரசிகர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில தினங்களாக நடிகர் கமலுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக கமல் தந்தி டிவியில் அமைச்சர்களின் நேர்மை குறித்து பேசினார்.
இந்நிலையில் கமலின் விமர்சனங்கள் குறித்து தமிழக நிதித் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி தாக்கியபோது கமல் ரசிகர்கள் ஆற்றிய மக்கள் பணிகள் என்ன?.
அதேபோல் கடந்த 2015-இல் சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது அவரது ரசிகர்கள் என்ன செய்தார்கள்?. அரசியல் என்பது முள்படுக்கை, வெளியே இருந்து கொண்டு கமல் பேசக் கூடாது.
வரும் ஜனவரிக்குள்ளாவது கமல் அரசியலில் நேரடியாக ஈடுபட வேண்டும். போராட்டங்கள் பலவற்றை நடத்திதான் அரசியல் கட்சி தலைவர்கள் உருவாகியுள்ளனர். ஆனால் எந்தவித போராட்டமும் நடத்தாமல் கமல் அரசியல் தலைவராகிவிடலாம் என்றார்.