ஆட்சியை கலைக்க ஸ்டாலினும் தினகரனும் மாறி மாறி காலில் விழுகின்றனர்- அமைச்சர் ஜெயக்குமார்
ஆட்சியை கலைக்க டிடிவி தினகரனும், ஸ்டாலினும் இணைந்து கூட்டுச்சதி செய்கின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்திற்கு எப்படியாவது முதல்வராகி விடவேண்டும் என்று துடிக்கும் ஸ்டாலின் தினகரனுடன் இணைந்து கூட்டுச்சதி செய்கிறார் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது பற்றி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், சபாநாயகர் நடவடிக்கையை விமர்சிக்க கூடாது என்று கூறினார். சபாநாயகர் உத்தரவில் யாரும் தலையிட முடியாது என்றும் தெரிவித்தார்.
ஜெயலலிதா ஆசியுடன் நடைபெறும் ஆட்சியை கலைக்க முயற்சி செய்கின்றனர். தினகரனும் ஸ்டாலினும் இணைந்து கூட்டுச்சதி செய்கின்றனர்.
ஸ்டாலின் ஒரு சந்தர்ப்பவாதி முதல்வராகிவிட வேண்டும் என்ற ஆசையில் தினகரன் காலில் விழுகிறார். அதேபோல ஜெயலலிதா ஆசியுடன் நடைபெறும் ஆட்சியை கலைக்க தினகரன் முயற்சி செய்கிறார் இதற்காக ஸ்டாலின் காலில் தினகரன் விழுவதாகவும் கிண்டலடித்தார் ஜெயக்குமார்.
கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. ஆட்சி நன்றாக நடைபெறுகிறழ என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழகத்திற்கு தேவையான நிதியை பெறவே டெல்லி வந்திருப்பதாகவும், தேர்தல் ஆணையத்தை சந்திக்கும் எண்ணம் எதுவுமில்லை என்றும் கூறினார்.
சட்ட விதிகளுக்கு உட்பட்டே சபாநாயகர் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளார். இது ஜனநாயக ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றார். ஒ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், இது பற்றி தான் கருத்து கூற முடியாது என்றார்.