மத்திய அரசுக்கு இணக்கமாக இருந்தால் பினாமி அரசா? திமுகவை பிரித்து மேய்ந்த ஜெயக்குமார்!
மத்திய அரசுக்கு இணக்கமாக இருந்தால் பினாமி அரசு என்று கூறுவதா என அமைச்சர் ஜெயக்குமார் திமுகவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மத்திய அரசுக்கு இணக்கமாக இருந்தால் பினாமி அரசு என்று கூறுவதா என அமைச்சர் ஜெயக்குமார் திமுகவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 17ஆண்டுகள் மத்தியில் கூட்டணியில் இருந்து வளங்கொழிக்கும் இலாகாவை பெற்றனர் என்றும் ஜெயக்குமார் திமுகவை சரமாரியாக சாடினார்.
அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக அரசை ஸ்டாலின் மற்றும் திமுகவினர் பினாமி அரசு என கூறுவதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் பினாமி அரசு என கூறுவதா என்றும் ஜெயக்குமார் சாடினார். திமுக மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த போது தமிழக உரிமைகளை தாரை வார்த்து கொடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
உரிமைகளை தாரை வார்த்த திமுக
மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக தமிழகத்தில் உள்ள எந்த பிரச்சனைக்கும் தீர்வு காணவில்லை என்றும் அவர் கூறினார். பல முக்கிய பிரச்னைகளை தமிழக உரிமையை தாரைவார்த்த திமுக தான் பினாமி அரசாக செயல்பட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ஜெ.மக்கள் பிரச்சனைக்காக போராடினார்
மாடு விற்பனை கட்டுப்பாடுகளை அரசு உற்று கவனித்து வருவதாகவும் அவர் கூறினார். ஜெயலலிதா மக்கள் பிரச்னைக்காக போராடினார். அவர் வழியில் அரசு செயல்படுகிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மத்திய அரசிடம் நிதி..
மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு நிதி பெற்று மாநில வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறோம் என்றும் அவர் கூறினார். அதற்காக பா.ஜ.வின் பினாமி அரசு என சொல்லக்கூடாது என்றும் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
வளம் கொழிக்கும் இலாகா
மேலும் 17 ஆண்டுகள் மத்தியில் அங்கம் வகித்து வளம் கொழிக்கும் இலாகாவை பெற்றதுதான் திமுகவின் சாதனை என்றும் ஜெயக்குமார் விளாசினார். திமுக மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசுடன் சேர்ந்து இனத்தை தான் அழித்தது என்றும் அவர் கூறினார்.
நிதானம் தேவை
எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு காண நிதானம் அவசியம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மாநில அரசின் உரிமையை தமிழக அரசு பேணி காக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மாடுகள் விற்பனை கட்டுப்பாடு விவகாரத்தில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீனவர்களின் பொருளாதாரம் மேம்பட அரசு வசதி ஏற்படுத்தி தரும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.