அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி... ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி மீன் வரும்!
ஆன்லைன் மூலம் மீன் ஆர்டர் செய்தால் அரைமணி நேரத்துக்குள் டெலிவரி செய்யப்படும் வகையில் ஆன்லைன் விற்பனையகத்தை,சென்னை பட்டினம்பக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் திறந்துவைத்தார்.
சென்னை: சென்னையில் ஆன்லைன் மூலம் மீன் விற்பனை நடைபெறும் என்றும் அரை மணி நேரத்துக்குள் ஆர்டர் செய்பவருக்கு மீன் டெலிவரி செய்யப்படும் எனவும் நிதி மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆன்லைன் மூலம் மீன் விறபனையகத்தை பட்டினம்பாக்கத்தில் நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்துவைத்தார். அவருடன் சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மீன்கள் இதயநோய்கள் வராமல் தடுக்கக் கூடிய சக்தி கொண்டவை. மீன், ஆரோக்கியமான உணவு. இதை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் முயற்சி இன்றிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது.
ஆன்லைன் மூலம் மீன் ஆர்டர் செய்பவர்கள் www.meengal.com என்ற இணைய முகவரி மூலம் தேவைப்படும் மீன்களை ஆர்டர் செய்யலாம். ஆர்டர் செய்யப்பட்ட அரை மணியிலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் மீன்கள் டெலிவரி செய்யப்படும். குறைந்தபட்சம் ரூ.500க்கு ஆர்டர் செய்ய வேண்டும். டெலிவரி கட்டணமாக ரூபாய் 35 வசூலிக்கப்படும் என்று கூறினார்.
ஆன்லைனில் ஆர்டர் செய்ய இயலாதவர்கள் 044- 24956896 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார். மேலும், மீன் ஆர்டர் செய்பவர்கள், மீன் அங்காடி இருக்கும் இடத்தைச்சுற்றி 5 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருக்க வேண்டும். சென்னையில் மட்டுமில்லாது பிற மாவட்டங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கூறினார்.