கமல் யாருடைய ஊதுகுழலாகவோ செயல்படுகிறாராம்.. 'கண்டுபிடித்த' அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: அதிமுக அரசின் ஊழல்களை ஆதாரங்களோடு பட்டியலிடுமாறு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் நேற்று இரவு வேண்டுகோள்விடுத்திருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர்கள் மணியன், ஜெயக்குமார் போன்றோர் கமல் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். கமல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் மூலமாக ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறியதையும் அவர்கள் விமரம்சித்துள்ளனர்.
அறிக்கையில், நிதி அமைச்சர் ஜெயக்குமாரை தம்பி என குறிப்பிட்டிருந்தார் கமல். இதன்மூலம் தன்னைவிட அனுபவம் குறைந்தவர் ஜெயக்குமார் என்பதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தார்.
ஹிந்தி போராளி
இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: "ஏக் துஜே கேலியே" என்ற ஹிந்தி படத்தில் நடித்து ஹிந்தி புகழ் பரப்பிய ஹிந்தி எதிர்ப்பு போராளி எனது அருமை சகோதரர் கமல் அவர்களுக்கு முதலில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
எதைப்பற்றியும் பேசியதில்லை
இரண்டாவதாக, எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன் என டிவிட்டர் பக்கத்தில் கமல் கூறியதை பார்த்தேன். ஆனால், எதைப் பற்றி பேசினார் என்று கடந்த கால வரலாறை எடுத்து பார்த்தால் எதையும் பேசவில்லை.
அந்தர் பல்டி
யாருடைய ஊதுகுழலாகவோ இருந்து கொண்டு அம்மா அரசு மீது ஊழல் என்ற சேற்றை வாரி வீசி விட்டு, இன்றைக்கு ஏன் பதுங்கி கொள்ள வேண்டும்?. ஆதாரம் இருந்தால் வழக்கு போடலாம். அதை சந்திக்க எந்த சூழலிலும் நாங்கள் தயார். எவ்வித ஆதாரமும் இல்லாமல், குற்றச்சாட்டை மட்டும் சுமத்திவிட்டு, திடீரென இன்று அந்தர்பல்டி.
தூண்டுகிறார்
ரசிகர்கள் கண்ணியமாக இதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டும், அதுவும் வலைத்தளங்களில் தெரிவிக்க வேண்டும் என்று கமல் கூறியுள்ளார். இப்படி சொல்லி இவர் ரசிகர்களை தூண்டிவிடுகிறார். நான் எவ்வளவு கண்ணியமாக பேசுபவன். கமலை என்றாவது ஒருமையில் நான் பேசியிருப்பேனா. ஆனால் அமைச்சர்களை கல்லுளி மங்கன் என கமல் கூறியுள்ளதை வைத்து அவரது கண்ணியத்தை புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கமல் அறிக்கை
ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்ட பின்பும், சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதிசயம், கல்லுளி மங்கர் போன்ற ஊழலார்க்கே உரித்தான குணாதிசயம் என்று கமல் தனது அறிக்கையில் கூறியிருந்ததுதான் ஜெயக்குமார் கோபத்திற்கு காரணம்.