திமுகவிற்கு கமல் முட்டுகொடுக்கும் அளவு கட்சியின் நிலைமை மோசமாக உள்ளது.. சீண்டும் ஜெயக்குமார்!
திமுகவிற்கு முட்டுகொடுக்க நடிகர் கமல்ஹாசன் தேவைப்படும் அளவிற்கு அந்தக் கட்சியின் நிலைமை மோசமாகியுள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார்தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுகவின் நிலைமை நடிகர் கமல்ஹாசன் முட்டுகொடுக்கும் அளவிற்கு மோசமாகியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி சர்ச்சை குறித்த செய்தியாளர்களின் சந்திப்பின் போது சிஸ்டம் சரியில்லை என்று தான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவித்திருந்ததாகவும், அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதாக கமல்ஹாசன் கூறியிருந்தார். கமலின் இந்த கருத்திற்கு அதிமுக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஒருபடி மேலே போய் வருமான வரி கட்டினாரா என்றபதை சரி பார்க்க வேண்டுமா என்று கேட்டிருந்தார்.
இந்நிலையில் அமைச்சர்கள் நடிகர் கமலுக்கு விடுக்கும் மிரட்டல்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். கமலுக்கு விடுக்கும் மிரட்டல் ஜனநாயகத்திற்கு அடிப்பைட உரிமையை பறிக்கும் என்றும் ஸடாலின் கூறினார். ஸ்டாலினின் ஆதரவிற்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் நன்றி தெரிவித்திருந்தார்.
இதனிடையே சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கமல்ஹாசனுக்கு தைரியம் இருந்தால் அரசியலுக்கு வந்து கருத்து தெரிவிக்கட்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் திமுகவிற்கு முட்டுக் கொடுக்கவே நடிகர் கமலுக்கு ஸ்டாலின் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார். கமல் முட்டுக் கொடுக்கும் அளவிற்கு திமுகவின் நிலைமை மோசமாகியுள்ளதாகவும் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.