வந்தா, வெளக்கமாத்தால அடிப்போம்.. அமைச்சர் மோகனை எச்சரித்த கிராமத்தினர்!
விழுப்புரம்: தமிழக அமைச்சர் ப. மோகன் வாக்கு சேகரிக்கச் சென்றபோது ஊருக்குள் வந்தால் செருப்பு, விளக்குமாற்றால் அடிப்போம் என்று கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்ததால் அமைச்சர் மோகன் அதிர்ச்சி அடைந்து கிராமத்துக்குள் வராமல் திரும்பிச் சென்றார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் ப. மோகன், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுக அமைப்புச் செயலாளராகவும் இருக்கிறார் மோகன். அவர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கொசப்பாடி அரசம்பட்டு என்ற கிராமத்திற்கு அவர் வாக்கு சேகரிக்க வந்தபோது ஊர் மக்கள் திரண்டு வந்து எல்லையிலேயே அவரது காரை வழிமறித்து நிறுத்தினர். ஊருக்குள் மோகன் வரக் கூடாது. மீறி வந்தால் செருப்பு விளக்குமாற்றால் அடிப்போம் என்று அவர்கள் கோபத்துடன் கூறினர். நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து கோபத்துடன் ஆவேசமாகப் பேசியதால் அதிர்ச்சி அடைந்தார் மோகன்.
மக்கள் கோபத்துடன் காணப்பட்டதால் அவர் ஊருக்குள் நுழையாமல் திரும்பிச் சென்றார்.