சசிகலாவை நீக்க எதிர்ப்பு-வைத்திலிங்கம் கூறியது தனிப்பட்ட கருத்து- அமைச்சர் ஓஎஸ் மணியன் போர்க்கொடி!
அதிமுக பொதுச்செயலர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க அமைச்சர் ஓ.எஸ். மணியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலாவை பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வைத்திலிங்கம் எம்.பி. கூறியிருப்பதற்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதிமுக அணிகள் இன்று அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தன. இந்த இணைப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம் எம்.பி. சசிகலாவை அதிமுக பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அவசர பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என்றார்.
இதற்கு சசிகலாவின் தம்பி திவாகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தம்மிடம் 8 எம்.எல்.ஏக்களும் தினகரனிடம் 18 எம்.எல்.ஏக்களும் இருக்கின்றனர்; நாங்கள் நினைத்தால் எதுவும் நடக்கும் எனவும் மிரட்டல் விடுத்தார் திவாகரன்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ். மணியன், இன்றைய கூட்டத்தில் பொதுச்செயலர் பற்றியோ சசிகலா குறித்தோ அஜெண்டா எதுவும் இல்லை. பொதுச்செயலர் பதவி குறித்து பொதுக்குழு கூடிதான் முடிவெடுக்க வேண்டும். சிலர் அதுபற்றி கூறியது தனிப்பட்ட கருத்தாகத்தான் இருக்க முடியும் என்றார்.
அடுத்த ஆட்டம்!