அரோகரா... "அம்மா" முதல்வராக வேண்டி வடபழனி முருகனுக்கு 1067 லிட்டர் பாலாபிஷேகம்!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி வடபழனி முருகன் கோவிலில் அமைச்சர் பா.வளர்மதி ஏற்பாட்டில் 1067 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தனது முதல்வர் பதவியை இழந்தார். ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
விரைவில் அந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுகவினரின் பூஜைகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன.
பூஜைகள்... யாகங்கள்...
இதற்கிடையே, சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு சாதகமாக வர வேண்டும், மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்க வேண்டும் என பல்வேறு பூஜைகள், யாகங்கள் நடத்தி வருகின்றனர் அதிமுகவினர்.
காவடி... தீமிதி
ஊர் தோறும் அமைச்சர்கள் தலைமையில் விதம் விதமாக டிசைன் டிசைனாக பூஜைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. காவடி, தீமிதி, பால் குடம் என கலக்கி வருகிறார்கள் அமைச்சர்களும், அதிமுகவினரும்.
பாலாபிஷேகம்...
அந்த வகையில், அமைச்சர் பா.வளர்மதி இன்று வடபழனி முருகன் கோவிலில் பாலாபிஷேகம் ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி, காலை 8.45 மணியளவில் ஆயிரத்து 67 லிட்டர் பால் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
அர்ச்சனை...
பின்னர் முருகனுக்கு ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. ஜெயலலிதா நீடுழி வாழவும், மீண்டும் முதல்வராக வேண்டியும் அவரது பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து வழிபட்டனர்.
சரி இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தியது ஆவின் பாலா அல்லது திருமாலா பாலா... என்பதுதான் சரியாகத் தெரியவில்லை!.