இரு அணிகளும் இணைய வேண்டி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆண்டாள் கோவிலில் சிறப்பு பூஜை!
அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்பு பூஜை நடத்தினார்.
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று சிறப்பு பூஜை நடத்தினார். இரு அணிகளும் இணைய அவர் பூஜை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சகிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது. இரு அணிகளும் இரட்டை இலைச்சின்னத்துக்கு போட்டி போட்டதால் தேர்தல் ஆணையம் இரட்டைஇலைச் சின்னத்தை முடக்கியது.
இந்நிலையில் இரு அணிகளும் இணைவதாக பேச்சுகள் அடிபட்டன. இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தலைமையிலான கோஷ்டிகள் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக தலா 7 பேர் கொண்ட குழுக்களை அமைத்துள்ளன.
இந்த குழு விரைவில் பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிகிறது. இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து செய்தியளார்களிடம் பேசிய அவர் இரு அணிகளும் இணைய பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார். மேலும் இரட்டை இலை சின்னம் மீண்டும் சிடைக்க பிரார்த்தனை செய்ததாகவும் அவர் கூறினார். இரு அணிகளும் பேசி ஒன்றினைய வேண்டும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.