ஓ.பி.எஸ். மீண்டும் முதல்வராவதில் தவறில்லை.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தடாலடி
அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற செம்மலையின் கருத்தில் தவறில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உகந்த சூழல் உருவாகியுள்ளதாக இரு அணியினரும் மாறி மாறி கூறிவந்தன. இதனால் பேச்சு வார்த்தை இன்று நடைபெறும் நாளை நடைபெறும் என ஒருவாரமாக எதிர்ப்பாக்கப்பட்டது.
இதற்காக ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் அமைக்கப்பட்ட பேச்சு வார்த்தை குழு எப்போது கூடி பேசும் என்று பரபரப்புகள் நீடித்து வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறவில்லை. இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை, எடப்பாடி அணியுடன் சேர தொண்டர்கள் விரும்பவில்லை எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் அடுத்த மாதம் தொடங்கும், அதற்குள் இரு அணிகளும் இணையும். இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற செம்மலையின் கருத்தில் தவறில்லை. தினகரன் கைதுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இரு அணிகளும் ஒன்று சேர்வதே அனைவரின் விருப்பமாக உள்ளது. மேல் மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில் செம்மலை தீர்மானம் பற்றி கவலை இல்லை. இரு அணிகள் இணைவது குறித்த முடிவை எடுக்க செம்மலைக்கு அதிகாரம் இல்லை என்றார்.