வைகை அணை தண்ணீரை மூட ரப்பர் பந்து - செல்லூர் ராஜூவின் புது ஐடியா
வைகை அணை தண்ணீர் ஆவியாவதை தடுக்க ரப்பர் பந்துக்களைப் போடப் போவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
சென்னை: வைகை அணை தண்ணீர் ஆவியாவதை தடுக்க ரப்பர் பந்துகளைக் கொண்டு மூடப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். தெர்மாகோல் திட்டம் தோல்வியடைந்ததால் அடுத்த கட்ட நடவடிக்கையாக ரப்பர் பந்துகளை மிதக்க விட திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
தேனி மாவட்டத்தின் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள வைகை அணை நீர் தேக்கத்தில் தெர்மாகோல் அட்டைகளை நிரப்பி நீர் ஆவியாகாமல் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
காற்றில் பறந்த அட்டைகள்
தேனி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் தெர்மாகோல் அட்டைகளை ஒவ்வொன்றாக அமைச்சர் செல்லூர் ராஜூ நீர் மேல் போட்டார். அதிகாரிகளும் தெர்மாகோல் அட்டைகளை பிடித்தவாறு போஸ் கொடுத்தனர். உடனடியாக காற்று வீசியதால் தெர்மாகோல் அனைத்தும் உடனடியாக கரை ஒதுங்கின.
கரை ஒதுங்கிய அட்டைகள்
அங்கிருந்தவர்கள் படகில் சென்று நீர் தேக்கத்தின் நடுவில் போய் அட்டைகளை அடுக்க ஆரம்பித்தனர். ஆனால் அதுவும் கைகொடுக்கவில்லை. அனைத்து அட்டைகளும் கரை ஒதுங்க ஆரம்பித்தன.
அறிவியல் ரீதியாக அணுக முடிவு
இந்த திட்டத்துக்கு செலவு செய்யப்பட்ட தொகை ரூ.10 லட்சம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜு அறிவியல் ரீதியாக அணுகி திட்டத்தை வெற்றி பெற செய்வோம் என்றார்.
செல்லூர் ராஜூ புது ஐடியா
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது அங்குள்ள ஆற்றில் நீர் ஆவியாதலை தடுக்க காற்று நிரப்பப்பட்ட பந்துகள் ஆற்றில் மிதக்கவிடப்பட்டன, இது வெற்றியடைந்து உலகப்புகழ் பெற்றது. இதே போல வைகை அணையிலும் தண்ணீர் ஆவியாவதை தடுக்க ரப்பர் பந்துகளைப் போட்டு மூட முடிவு செய்துள்ளதாக செல்லூர் ராஜூ கூறினார்.
ரப்பர் பந்துகள்
தெர்மகோல் திட்டம் பொறியாளர்கள், அதிகாரிகள் இணைந்துதான் செயல்படுத்தப்படுத்தப்பட்டது. அந்த திட்டம் தோல்வியடைந்ததால் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ரப்பர் பந்துகளை கொண்டு அணையை மூடுவோம் என்று கூறியுள்ளார்.