மார்க்கெட் இழந்த கமல் நாலாந்தர பேச்சாளர் போல பேசுகிறார்!- செல்லூர் ராஜூ
சென்னை: நாலாந்தர பேச்சாளர் போல பேசிக் கொண்டிருக்கிறார் கமல் ஹாஸன் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாகத் தாக்கியுள்ளார்.
நடிகர் கமல் ஹாஸனுக்கும் அதிமுக அமைச்சர்களுக்குமான அறிக்கை, வார்த்தை மோதல் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. காரணம், அனைத்து மட்டத்திலும் ஊழல் மலிந்த அரசு என அவர் அரசை சாடியதுதான்.
தினமும் அமைச்சர்கள் கமலைத் திட்டி பேட்டி கொடுக்கின்றனர் அல்லது அறிக்கை விடுகின்றனர்.
இன்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், "கமல் மார்க்கெட் இழந்ததனால் டிவிக்கு வந்துள்ளார். நாலாந்தர பேச்சாளர் போன்று கமல் பேசுகின்றார். இதற்கு முக ஸ்டாலின் வேறு வரவேற்பு தெரிவிக்கிறார். அதனாலேயே கமல் கூறியது இன்னும் தவறாக உள்ளது. அதிமுக பிரிந்ததனாலேயே கமல் போன்றவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இல்லாவிட்டால் இவர்கள் இருக்குமிடம் தெரியாமல் இருந்திருப்பார்கள். அதிமுக அரசை குற்றம் சொல்ல கமல் போன்றவர்களுக்கு தகுதி இல்லை," என்றார்.