அரியணை ஏறிய அம்மா… மொட்டை போட்டு, அக்னிச்சட்டி ஏந்திய அமைச்சர் செந்தில் பாலாஜி
கரூர்: எதையாவது வித்தியாசமாக செய்து முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்தைக் கவருவதில் வல்லவரான அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிரடியாக 5000 பேருடன் மொட்டை போட்டு கரூர் மாரியம்மனுக்கு அக்னிச்சட்டி ஏந்தி அசத்தியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற நாள் முதலாகவே விடுதலைக்காகவும், மீண்டும் முதல்வர் ஆக வேண்டியும், அதிமுகவினர் கோவில் கோவிலாக சென்று யாகங்களும் பால்குடங்களும் எடுத்து வேண்டிக்கொண்டனர். மீண்டும் முதல்வர் ஆவார் ஜெயலலிதா என்று திரும்ப திரும்ப கூறிவந்தனர் அதிமுகவினர். அவர்களின் நம்பிக்கையும் வேண்டுதல்களும் பலித்துவிட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை ஆனதையொட்டி மீண்டும் முதல்வராக கடந்த 23ஆம் தேதி பதவியேற்றார் ஜெயலலிதா.
இதனையடுத்து பல்வேறு கோயில்களிலும் அதிமுகவினர் மொட்டை அடித்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, திருச்செந்தூரில் மொட்டை போட்டு பிரார்த்தனை செய்தார். இதேபோல திருப்பூர் மேயர் விசாலாட்சி பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து தனது வேண்டுதலை நிறைவேற்றினர்.
எப்போதும் அதிரடிக்கு பெயர் போன அமைச்சர் செந்தில்பாலாஜி அமைதியாகவே இருந்தார். ஜெயலலிதா சிறைக்கு சென்றபோது தீபாவளி சமயத்தில் திருப்பதிக்கு சென்று ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலையாக மொட்டை போட்டு திரும்பியவர், அடுத்தடுத்து கோவில் வழிபாடு, சிறப்பு பூஜை, யாகம், ரத்ததானம், காவடி தூக்குதல், அக்னி சட்டி எடுத்தல், பிரமாண்ட விளக்கு பூஜை என அடுத்தடுத்து செய்து வந்த செந்தில் பாலாஜி, தாடி வளர்த்து முழு சாமியாரைப்போல் காட்சியளித்தார்.
கடந்த 23 ஆம் தேதி நாட்களுக்கு முன் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா அமைச்சரவையில் பதவி ஏற்றுக்கொண்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்த அதிரடியாக என்ன செய்யப்போகிறாரோ என மக்கள் யோசிப்பதற்குள் அதை நிறைவேற்றிக் காட்டிவிட்டார்.
கரூரில் மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தலைமையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் திரண்டு, கரூர் அமராவதி ஆற்றுக்கு சென்றனர். அங்கு அமைச்சர் செந்தில்பாலாஜி ஜெயலலிதா விடுதலையானதற்காக வேண்டுதலை நிறைவேற்றி மொட்டை போட்டார். அவரைத் தொடர்ந்து 5 ஆயிரம் அ.தி.மு.க.வினரும் மொட்டை அடித்துக் கொண்டனர்.
பின்னர் கரூர் அமராவதி நதியில் இருந்து சண்டமேளங்கள் முழங்க ஆரவாரத்துடன் பிளக்ஸ் பேனர்கள் என புடை சூழ, கையில் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டு கரூர் மாரியம்மன் கோயிலுக்கு வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்றதற்காக அதிரடியாக 5000 பேருடன் மொட்டை போட்டு கரூரையே கலக்கி மீண்டும் கவனம் ஈர்த்துவிட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி. கடந்த சில மாதங்களாக தாடியும், நீண்ட சடை முடியுமாக வலம் வந்த அமைச்சர்கள் அனைவரும் மொட்டை போட்டு வருவதால் கோட்டை முழுவதும் இனி மொட்டை அமைச்சர்களை மட்டுமே சில மாதங்களுக்கு காணமுடியும். தமிழக மக்கள் இனி எத்தனை விசித்திரங்களைக் காணப்போகிறார்களோ தெரியலையே.