தர்மபுரி குழந்தைகள் மரணம்... டாக்டர், நர்சுகள் மனம் புண்படும்படி அறிக்கை விட வேண்டாம்- அரசு
சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுபவமிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்தான் பணிபுரிகின்றனர் என்றும், எனவே, அவர்கள் மனது புண்படும்படி அறிக்கைகள் வெளியிட வேண்டாம் என மக்கள் நல்வாழ்வு அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த வாரம் தர்மபுரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளில் அடுத்தடுத்து 14 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக எதிர்க் கட்சித் தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்தனர். மருத்துவமனையின் குறைபாடு காரணமாகவே பச்சிளம் குழந்தைகள் பலியானதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள். இது தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்கள்.
இந்நிலையில், நேற்று மக்கள் நலவாழ்வு அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-
தமிழ் நாடு அரசு மருத்துவ சேவையில் மிகச் சிறப்பாகச் செயல்படும் முதன்மை மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் தரமான மருத்துவ சேவை வழங்குவதை உறுதி செய்ய அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.