சென்னையில் திடீர் மின்தடைக்கு காரணம் என்ன? அமைச்சர் தங்கமணி விளக்கம்
சென்னை: சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில், மின்வெட்டு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. வடசென்னை, ராயப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவல்லிக்கேணி, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஐ.ஓ.சி, பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர், சென்ட்ரல், அண்ணா சாலை, தி.நகர், மடிப்பாக்கம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. கோடை காலம் என்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை அண்ணா சாலையிலுள்ள தலைமை அலுவலகத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மின்வெட்டு குறித்து விளக்கம் அளித்த அவர்,மணலி - மயிலாப்பூர் இடையிலான உயர் மின் அழுத்த பாதையில் பழுது காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. பழுதை சீர் செய்யும் பணி துரிதமாக நடைபெறுகிறது.
பழுதை சீரமைக்கும் பணியில் 200க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படும். அதுவரை, பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டார். மேலும், மின் தடை காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.