குடிநீர் கேட்டு அமைச்சர் உதயகுமாரை முற்றுகையிட்ட பெண்கள்...திருவண்ணாமலையில் பரபரப்பு!
திருவண்ணாமலை அய்யம்பாளையம் என்ற ஊரில் நலத்திட்ட உதவிகளை வழங்கச் சென்ற அமைச்சர் உதயகுமாரை மக்கள் குடிநீர் கேட்டு முற்றுகையிட்டனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நலத்திட்ட உதவிகளை வழங்கச் சென்ற அமைச்சர் உதயகுமாரை பொதுமக்களும், பெண்களும் முற்றைகையிட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலையிலும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் கடுமையான வறட்சி நிலவுகிறது. மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். ஏரி மற்றும் கால்வாய் பகுதிகளில் குழி தோண்டி, அதிலிருந்து வரும் நீரை வடிகட்டி குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அய்யம்பாளையம் என்ற ஊரில், நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக அமைச்சர் உதயகுமார் சென்றிருந்தார். அப்போது பொதுமக்களும் பெண்களும் அமைச்சரை முற்றுகையிட்டு, குடிநீர் கிடைக்க வழி செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
பொதுமக்கலீல்ன் இந்த எதிர்பாராத முற்றுகையால், அமைச்சர் உதயகுமார் திணறிப் போய், பதிலளிக்க முடியாமல் தடுமாறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மக்களிடம் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்து, அமைச்சரை மக்களிடமிருந்து மீட்டுள்ளார்.
அண்மையில் கோவையில் அமைச்சர் வேலுமணியையும் மக்கள் இவ்வாறு முற்றுகையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.