வருமான வரித் துறை அலுவலகத்தில் கீதாலட்சுமி ஆஜரானார்... விசாரணை தொடங்கியது
வருமான வரித்துறையினர் அனுப்பிய சம்மனை தொடர்ந்து எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி சென்னை அலுவலகத்தில் ஆஜரானார். எனினும் விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை.
சென்னை: வருமான வரித்துறையினர் அனுப்பிய சம்மனை தொடர்ந்து எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி சென்னை அலுவலகத்தில் ஆஜரானார். எனினும் விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை.
இதையடுத்து வருமான வரித்துறையினர் விஜயபாஸ்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது தனக்கு சம்மன் கிடைக்காததால் தான் ஆஜராக தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
முக்கிய ஆவணங்கள்
அப்போது ரூ.89 கோடி பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் இந்த சோதனை அறிக்கையின்படி, தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தியது. மேலும் மேற்கண்ட மூவருடன் சிட்லபாக்கம் ராஜேந்திரனுக்கும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆஜராகினர்
இதைத் தொடர்ந்து கீதா லட்சுமியை தவிர்த்து ஏனைய மூவரும் கடந்த வாரம் ஆஜராகினர். அப்போது அவர்களிடம் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் பணப்பட்டுவாடா நடைபெற்றதை விஜயபாஸ்கர் ஒப்புக் கொண்டார். தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமனஅறத்தில் கீதா லட்சுமி தாக்கல் செய்ய ரிட் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
கீதா லட்சுமி ஆஜர்
இதைத் தொடர்ந்து கீதா லட்சுமி வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அவரிடமும் 6 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் துறை ரீதியான முறைகேடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக விஜயபாஸ்கரை பற்றிய கேள்விகள்தான் அதிகம் இடம்பெற்றிருந்தன.
சரத்குமார், ராதிகா ஆஜர்
இந்நிலையில் ராதிகாவின் ராடன் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கிடைத்ததை அடுத்து அவர்கள் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களும் ஆஜராகினர்.
இன்று கீதாலட்சுமி, விஜயபாஸ்கர் ஆஜர்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக வழங்கப்பட்ட பணப்பட்டுவாடா குறித்த விசாரணை மட்டும் அல்லாமல் பல்வேறு முறைகேடுகள் குறித்தும் விசாரிக்க வேண்டி உள்ளதால் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் சம்மன் அனுப்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய ஆதாரங்கள் சிக்கின
மாநிலம் முழுவதும் வருமான வரித் துறையிநர் நடத்திய சோதனையில் போதிய ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. இதுவரை நடந்த விசாரணையில் ஆஜரானவர்கள் இவர்கள் முரண்பட்ட பதில்களையே அளித்தனர். உண்மை விபரங்களை அவர்களிடம் இருந்து பெறுவதற்காக தான் இன்று வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில் முக்கிய தகவல்கள் வெளிவரவாய்ப்பு உள்ளது.