திருவள்ளூரில் கண் அறுவை சிகிச்சை நிறுத்தம்: ஸ்டாலின் புகார் மீது நடவடிக்கை- விஜயபாஸ்கர் உறுதி
சென்னை: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் எழுப்பிய புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான 3வது நாள் விவாதம் இன்று நடைபெற்றது. இன்றைய விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்துப் விஜயபாஸ்கர் பேசியதாவது: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை தொடர்பான மு.க.ஸ்டாலின் புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய கண் ஒளி சிகிச்சை திட்டத்தின் கீழ் கண் அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 5.5 லட்சம் நபர்களுக்கு தமிழகத்தில் கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.
மேட்டூர் அரசு கண் மருத்துவமனையில் தற்காலிகமாக கண் அறுவை சிகிச்சை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கண் பார்வை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உயர் சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.