அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மீண்டும் சிக்கல்... குவாரி முறைகேடு குறித்து முக்கிய ஆதாரம் சிக்கியது!
அமைச்சர் விஜயபாஸ்கர் தனது குவாரியில் விதிகளுக்கு புறம்பாக கற்களை வெட்டி எடுத்து லாபம் சம்பாதித்ததற்கான புதிய ஆதாரங்கள் வருமான வரித்துறையிடம் சிக்கியுள்ளது.
சென்னை : வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கரின் கணக்கில் காட்டப்படாத பணம் குறித்து நடத்திய விசாரணையில் அவர் விதிகளுக்கு புறம்பாக குவாரியில் கல் வெட்டி எடுத்தற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. இந்தப் புகாரையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டு, புதுக்கோட்டையில் உள்ள கல்குவாரி உள்ளிட்ட இடங்களல் வருமான வரித்துறையினர் சோதனை செய்த போது பணப்பட்டுவாடா தொடர்பாக சில ஆதாரங்கள் சிக்கியதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அமைச்சரின் கணக்கில் பணம் தொடர்பாக வருமான வரித்துறை நடத்திய விசாரணையில் புதிய ஆதாரம் சிக்கியுள்ளதாக ஆங்கில நாளேடான தி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பரபரப்பான பல முக்கியத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
சட்ட விதிமீறல்
அதில் புதுக்கோட்டை மாவட்டம் திருவெங்கைவாசலில் அமைச்சர் விஜயபாஸ்கரின் குடும்பத்தாரால் நடத்தப்படும் ராசி ப்ளூ மெடல் நிறுவனம் அனுதித்ததை விட 3 மடங்கு கற்களை வெட்டி எடுத்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக வருமான வரித்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.
குட்டு அம்பலமானது
நாமக்கலில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சுப்ரமணியன் வீட்டில் இருந்து எடுத்த சில ஆவணங்கள் மூலம் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து குவாரியில் சோதனை நடத்தி அளவெடுத்த போதும் முறைகேடுகள் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அமலாக்கத்துறையும் விசாரிக்கும்
குவாரி முறைகேடு குறித்து அமைச்சரின் மனைவி ரம்யா, அந்த நிறுவனத்தின் சார்டர்ட் அக்கவுண்டன்ட் உள்பட பலரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணை முடிந்தவுடன் அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்த உள்ளதாக அதிகாரிகள் மட்டத்திலான தகவல்கள் உறுதிபடுத்தியுள்ளன.
சிக்கல்
பான்மசாலா, குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றதில் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயர் அடிபட்டது. இந்நிலையில் குவாரி முறைகேட்டில் கிடைத்துள்ள புதிய ஆதாரம் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.