அதிமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டா போட்டி: அமைச்சர், எம்.எல்.ஏக்கள் மனுதாக்கல்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு கட்சித் தேர்தல் பொறுப்பாளர்களிடம் மனுதாக்கல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் அண்ணா தி.மு.க.வில் மாவட்ட ரீதியாக மொத்தம் 50 மாவட்டங்கள் உள்ளன. அண்ணா தி.மு.க. அமைப்பு தேர்தல்கள் 50 மாவட்டங்களுக்கும் கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 10 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. 11வது கட்ட தேர்தல் 15ந்தேதி முதல் 17ந்தேதி வரை 25 மாவட்டங்களுக்கு நடைபெறும் என்று அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
மேலும் 25 மாவட்டங்களுக்கு வரும் 18ந்தேதி முதல் 20ந்தேதி வரை 12வது கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி 25 மாவட்டங்களுக்கு இன்று மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடந்தது.
தேர்தல் நடத்த மண்டல தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட தேர்தல் ஆணையாளர்களையும் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னிலையில் தேர்தல் ஆணையர்களிடம் இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஜெயலலிதா ஆணைப்படி அண்ணா தி.மு.க. 12வது கட்ட அமைப்பு தேர்தல் இன்று 25 மாவட்டங்களில் நடந்தது. எல்லா இடங்களிலும் தொண்டர்கள் ஆர்வத்துடன் குவிந்திருந்தன. ஒவ்வொரு பொறுப்புக்கும் ஏராளமான பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
11வது கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் 12வது கட்டமாக இன்று முதல் 3 நாட்களுக்கு 25 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
அதாவது மாவட்ட கழக செயலாளர், இணை செயலாளர் (பெண்) 2 துணை செயலாளர் பதவிகள், பொருளாளர், அவைத்தலைவர், 3 பொதுக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடந்தது.
சென்னை மாவட்ட செயலாளர்கள் பதவி
சென்னையில் கட்சி ரீதியாக தென்சென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு, வடசென்னை வடக்கு, வடசென்னை தெற்கு என 4 மாவட்டங்கள் உள்ளன. 4 மாவட்டங்களுக்கும் 4 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்ட தேர்தலுக்கும் தேர்தல் பொறுப்பாளர் மற்றும் தேர்தல் ஆணையாளர்களை ஜெயலலிதா நியமித்திருந்தார். அதன்படி அந்தந்த இடங்களில் தேர்தல் பொறுப்பாளர் முன்னிலையில் தேர்தல் ஆணையாளர்கள் மனுவை பெற்றுக் கொண்டனர்.
தேர்தல் பொறுப்பாளர்கள்
தென்சென்னை வடக்கு தென்சென்னை வடக்கு மாவட்ட கழக தேர்தல் தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள பசும்பொன் தேவர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாவட்டத்துக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், வக்ப் வாரிய தலைவருமான அ. தமிழ்மகன் உசேனை தேர்தல் பொறுப்பாளராக ஜெயலலிதா நியமித்திருந்தார். ஆணையாளர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் கே. தமிழரசன், ஆர். சாமி, எம்.வி. கருப்பையா மற்றும் க. தவசி, எஸ்.எம். சீனிவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மனுக்களை வாங்கினார்கள். தற்போது மாவட்ட கழக செயலாளராக இருக்கும் வி.பி. கலைராஜன் எம்.எல்.ஏ., மீண்டும் மாவட்ட செயலாளர் பதவிக்கு இன்று மனு கொடுத்தார்.
4 பதவிகளுக்கும் மனு
மாமன்ற உறுப்பினர் வீடியோ சரவணன், மாவட்ட துணை செயலாளர், பொருளாளர், தலைவர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கும் மனு கொடுத்திருக்கிறார். தற்போது மாவட்ட இணை செயலாளராக இருக்கும் யு. கற்பகம் எம்.சி. மீண்டும் அந்த பதவிக்கு மனு கொடுத்திருக்கிறார். புஷ்பா நகர் ஆறுமுகம் எம்.சி மாவட்ட துணை செயலாளர் பதவிக்கு மனு கொடுத்துள்ளார்.
மாவட்ட பொருளாளர் பதவிக்கு ஆனைக்குட்டி ஆனந்தன் இன்று மனு கொடுத்தார். தொடர்ந்து ஏராளமான பேர் ஒவ்வொரு பதவிக்கும் பணம் செலுத்தி மனு கொடுத்தனர். தொண்டர்கள் கூட்டத்தில் மண்டபம் நிரம்பி வழிந்தது. அந்த பகுதி முழுவதும் கொடி தோரணங்கள் கட்டப்பட்டு எழுச்சியுடன் காணப்பட்டது.
வடசென்னை தெற்கு
வடசென்னை தெற்கு வடசென்னை தெற்கு மாவட்ட கழக தேர்தல் எழும்பூர் இம்பீரியல் ஓட்டலில் நடைபெற்றது.
இங்கு தேர்தல் பொறுப்பாளராக டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையனை ஜெயலலிதா நியமித்திருந்தார். தேர்தல் ஆணையாளர்களாக டாக்டர் கே.கோபால் எம்.பி., திருவாரூர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.எம். முகமது அஷ்ரப், மாவட்ட பேரவை செயலாளர் பொன். வாசுகிராம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜெ. விஜயராகவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாலகங்கா மனுதாக்கல்
வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பதவிற்கு நா. பாலகங்கா மனு தாக்கல் செய்தார். அப்போது ஏராளமான தொண்டர்களும், மாவட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர். மாவட்ட செயலாளர் பதவிக்கு வ.நீலகண்டன் எம்.எல்.ஏ., புரசை கிருஷ்ணன் உட்பட பலர் மனு கொடுத்திருந்தனர்.
விருதுநகரில் 10 பேர்
விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கு அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 10 பேர் கட்சித் தேர்தல் பொறுப்பாளர்களிடம் வியாழக்கிழமை மனுதாக்கல் செய்தனர்.மாவட்ட அதிமுக செயலாளர், மாவட்ட அவைத் தலைவர், மாவட்ட இணைச்செயலாளர், பொருளாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் விருதுநகரில் புதன்கிழமை தொடங்கியது. மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களான மதுசூதனன், கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட 5 பேர் போட்டியிடுபவர்களிடம் மனுக்களைப் பெற்றனர்.