ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்.. வீதி வீதியாக போகும் அமைச்சர்கள்.. விறுவிறுப்பான பிரசாரத்தில் அதிமுக!
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலையோட்டி அதிமுகவினரின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளதையடுத்து, பல்வேறு இடங்களில் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. திண்ணை பிரச்சாரக்கூட்டமும் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 13-ம் தேதி நடைபெற உள்ளது. கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா அறிவித்தபடி, அதிமுக வேட்பாளராக வளர்மதி இத்தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட நாச்சிக்குறிச்சியில், முன்னாள் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறும் திண்ணை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் பழனியப்பன், உதயகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து, ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில் வேட்பாளருக்கு ஆதரவாக நாச்சிக்குறிச்சியில் அமைச்சர்கள் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, ஸ்ரீரங்கம் ஒன்றாவது வார்டில் அமைந்துள்ள ராகவேந்திரா நகரில் கட்சியின் தேர்தல் அலுவலகத்தை அவைத்தலைவர் மதுசூதனன் திறந்து வைத்தார். பின்னர் அவரும், வேட்பாளர் வளர்மதி, அமைச்சர்கள் பழனியப்பன், சின்னையா, காமராஜ், அரசுத் தலைமைக் கொறடா மனோகரன் ஆகியோரும் வீடுவீடாகச் சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இதேபோன்று, ஸ்ரீரங்கம் திருவடித்தெருவில் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, திருவள்ளுவர் நகர், ராகவேந்திரா வளைவு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் வேட்பாளர் வளர்மதி, அமைச்சர்கள் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஸ்ரீரங்கம் தொகுதி முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து முகாமிட்டுள்ள அதிமுகவினரின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளதால் உணவகங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. சிறு கடைகள் ,சாலையோரக் கடை வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
425 வழக்குகள் பதிவு - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தகவல்
இதற்கிடையே, ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக இதுவரை 425 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் இரண்டு வகையான முக்கிய பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை தீவிரமாக நடைமுறைப்படுத்துவது, வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வாக்களிக்கும் சதவீதத்தை அதிகரிப்பது ஆகிய பணிகளைச் செய்யவுள்ளது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ளூர் காவல் துறையினர் ஏற்கெனவே பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 10 கம்பெனிகள் வரவுள்ளன. ஒரு கம்பெனியில் 60 முதல் 65 வீரர்கள் வரை இருப்பர். அதன்படி, துணை ராணுவ படையைச் சேர்ந்த சுமார் 650 பேர் ஸ்ரீரங்கம் வருகின்றனர். இதற்கான அனுமதியை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ள தலைவர்கள் தங்களது பெயர்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் அளித்திருந்து முன்அனுமதி பெற்றிருந்தால் அவர்களது பிரசார செலவு வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படாது. அந்த வகையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான அதிமுக,சார்பில் தலா 40 பேர் தங்களது பெயர்களை அளித்துள்ளனர்.
மேலும், புரட்சி பாரதம், இந்திய குடியரசு கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் செலவின பார்வையாளர், சட்டம்-ஒழுங்கை கண்காணிக்கும் அதிகாரி, பொது பார்வையாளர் என வெளிமாநிலங்களைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளும் தங்களது பணிகளைத் தொடங்கியுள்ளனர். அதில் பொது பார்வையாளரான பல்கர் சிங், தனது பணியை வெள்ளிக்கிழமை முதல் மேற்கொண்டுள்ளார்.
மேலும் தேர்தல் பிரசாரத்தின் போது, நடத்தை விதிகளை தீவிரமாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், அனுமதியின்றி தனியார் சுவர்களில் விளம்பரங்களை எழுதியது தொடர்பாக 387 வழக்குகளும், போஸ்டர்கள், பேனர்கள் வைத்ததாக 28 வழக்குகளும், அரசு சுவர்களில் விளம்பரங்கள் செய்தது குறித்து 10 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மொத்தமாக 425 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.