டிடிவி தினகரன் பதவியே கேள்விக்குறி... அவர் கொடுத்த பதவியும் அப்படித்தான்- அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: சசிகலா நியமித்த துணைப் பொதுச்செயலாளர் பதவியே தினகரனுக்கு கேள்விக்குறியாக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் தற்போது அறிவித்துள்ள பதவிகளும் கேள்விக்குறிதான் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
60 நாட்கள் கட்சியில் இருந்து ஒதுங்கியிருந்த டிடிவி தினகரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக அம்மா அணி சார்பாக கட்சியின் புதிய பொறுப்பாளர்களை நியமித்தார்.
அதிமுகவின் 18 அமைப்பு செயலர்கள் உள்ளிட்ட பல்வேறு நியமனங்களை டிடிவி தினகரன் அறிவித்தார். எம்.எல்.ஏக்கள் பலருக்கும் கட்சி பதவியும் கொடுத்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான காய்நகர்த்தான் இது என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
டிடிவி தினகரனின் அறிவிப்பு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி குறித்த வழக்கு தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. அப்படி என்றார் துணை பொதுச்செயலாளர் பதவியும் கேள்விக்குறிதான்.
அப்படியிருக்கும் போது, டிடிவி தினகரன் அறிவித்துள்ள பதவிகளும் கேள்விக்குறிதான் என்று கூறியுள்ளார் ஜெயக்குமார்.
இதனிடையே தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, கட்சியும், ஆட்சியும் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் நன்றாக நடைபெறுவதாக கூறினார். 134 எம்எல்ஏக்களும் ஒரே தலைமையின் கீழ் செயல்படுவதாகவும் கூறினார்.