16 வயது சிறுமிக்கு திருமணம் – தடுத்து நிறுத்திய கடலூர் அதிகாரிகள்!
கடலுர்: கடலூர் மாவட்டத்தில் 16 வயதான மைனர் பெண் ஒருவருக்கு நடக்க இருந்த திருமணம் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த சின்னகோட்டிமுளையை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகள் பேபி சுந்தரி. இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த பூவராகவன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
பூவராகவனுக்கும், பேபி சுந்தரிக்கும் கடந்த 1 மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் சேத்தியாத்தோப்பில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து கல்யாண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. நேற்று இரவு கல்யாண மண்டபத்தில் மணமகள் அழைப்பு விமரிசையாக நடந்தது.
இருவீட்டார் மற்றும் உறவினர்கள் சந்தோஷத்துடன், உற்சாகத்துடனும் மண்டபத்தில் பேசி கொண்டிருந்தனர். 18 வயது நிறைவடையாத பேபி சுந்தரிக்கு திருமணம் நடப்பதாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
உடனே கடலூர் மாவட்ட சமூக நல அலுலவர் புவனேஸ்வரி தலைமையில் அதிகாரிகள் அந்த மண்டபத்துக்கு விரைந்து வந்தனர். மணமகளிடம் விசாரித்தபோது அந்த பெண்ணுக்கு 16 வயது மட்டுமே பூர்த்தியாகியிருப்பது தெரிய வந்தது.
எனவே சட்டவிரோதமாக திருமணம் நடத்துவது தவறு என இரு வீட்டாரிடமும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். பிறகு இன்று நடைபெற இருந்த கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்டது. மணப்பெண் பேபி சுந்தரியை அதிகாரிகள் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.