காதல் தொல்லையால் மனமுடைந்த மாணவி தீக்குளிப்பு… இளைஞர் கைது
சேலம்: இளைஞரின் காதல் தொந்தரவு தாங்காமல் மனமுடைந்த பள்ளி மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடலில் தீ காயங்களுடன் மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்கொலைக்கு தூண்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவி சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி பகுதியிலுள்ள மந்தைவெளி பகுதியை சேர்ந்த ஒரு தொழிலாளியின் மகளாவார். 17 வயதான இவர், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த மாணவியை, அதே பகுதியை சேர்ந்த, குமார் என்பவரின் மகன் கார்த்தி காதலிக்கும்படி கூறி தொந்தரவு கொடுத்துள்ளார். இதற்கு, மாணவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆனாலும் கார்த்தியின் தொந்தரவு தீவிரமடைந்துள்ளது. கடந்த 18ஆம் தேதியன்று மாணவி மட்டும் தனியாக அவரது வீட்டில் இருந்தபோது, அங்கு சென்ற கார்த்தி காதலை ஏற்றுக்கொள்ளச் சொல்லி தொல்லை செய்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவி கார்த்தியின் தொல்லை தாங்காமல், வீட்டில் இருந்த மண்ணெண்ணயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைப் பார்த்து பயந்த கார்த்தி ஓடிவிட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர். இதில், மாணவி படுகாயமடைந்தார். அவரை ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவுசெய்த போலீசார், மாணவி அளித்த வாக்குமூலத்தின் படி தற்கொலைக்கு தூண்டிய வாலிபர் கார்த்தியை, கைது செய்துள்ளார். தீ காயமடைந்த மாணவி நேற்று மாலை உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.