விசாரணை கைதி பலி.. சென்னையில் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்கள் தீக்கிரை
சென்னை: சென்னை கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த சினேகலதா (24) என்பவர் இன்ஜினியராக பணியாற்றுகிறார்.
கடந்த 18ம் தேதி மேட்டுக்குப்பம் சக்தி சீனிவாசன் தெருவில் தனியாக நடந்து சென்ற அவரை ஆட்டோவில் வந்த 4 பேர் சரமாரியாக தாக்கி சங்கிலியை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சிந்தாதிரிபேட்டையைச் சேர்ந்த அருண் என்ற அருணாசலம் (22), மீன் கார்த்திக் (22) ஆகிய 2 பேரை பிடித்து துரைப்பாக்கம் கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.
அப்போது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட மீன் கார்த்திக், மருத்துவமனையில் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால்தான் அவர் இறந்தார் என்று கூறி அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை போலீஸ் வாகனங்கள் மீது வீசினர். ஆனால் அவை வெடிக்கவில்லை.
போலீஸ் நிலைய வளாகத்தின் பின்புறம் குற்ற வழக்குகள் சம்பந்தமான வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டு இடத்தில் நேற்று அதிகாலை அங்கிருந்து பயங்கர சத்தம் கேட்டது. அங்கு நிறுத்தி இருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
தகவல் அறிந்ததும் துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி வாகனங்களில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் அங்கு நிறுத்தி இருந்த 9 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாயின.
இது தொடர்பாக தனிப்படை போலீசார், கண்ணகி நகரில் சந்தேகப்படும்படியான சில நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை மாநகர போலீஸ் தரப்பில் கூறி இருப்பதாவது: இது பற்றி கண்ணகி நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரமிளா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் சந்தேகப்படும்படியான நபர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக கண்ணகி நகரைச் சேர்ந்த சுனாமி தினேஷ் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர், தான் பெட்ரோல் குண்டு வீசவில்லை. வாகனங்கள் மீது தீ வைத்து எரித்தேன் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.