நாளை மிஸ் கூவாகம் போட்டி.. களை கட்டும் கூத்தாண்டவர் கோவில் விழா!
விழுப்புரம்: விழுப்புரத்தில் நடைபெறும் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் நாளை மிஸ் கூவாகம் போட்டி நடைபெறுகிறது.
விழுப்புரம் அருகே உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த 21-ந் தேதி தொடங்கிய இந்தத் திருவிழாவில் நாளை மறுநாள் (5-ந் தேதி) தாலி கட்டும் நிகழ்ச்சியும், 6-ந் தேதி அரவாண் களப்பலி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
மகாபாரதத்தில் அரவாண் களப்பலி கொடுக்கப்படுவார். பலி கொடுப்பதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள விரும்புவார். ஆனால் எந்த பெண்ணும் அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க மாட்டார்கள். இதனால் கிருஷ்ணர் பெண் வேடம் அணிந்து அரவாணை திருமணம் செய்து கொள்வார்.
இதை நினைவு கூறும் வகையில் திருநங்கைகள் இந்த விழாவில் கலந்து கொண்டு அரவாணுக்கு மனைவியாக பாவித்து தாலி கட்டிக்கொள்வது வழக்கம். இதற்காக நாடு முழுவதில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திருநங்கைகள் கூவாகம் திருவிழாவிற்கு வருகை தருவார்கள்.
கூவாகம் திருவிழா காரணமாக நேற்றே திருநங்கைகள் விழுப்புரம் வந்து குவியத்தொடங்கி உள்ளனர். அங்குள்ள விடுதிகளிலும், தற்காலிகமாக எடுக்கப்பட்ட வாடகை வீடுகளிலும் மற்றும் புதுவையிலும் அவர்கள் தங்கியுள்ளனர்.
இன்று மாலை திருநங்கைகள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. முதன்முறையாக தேசிய அளவில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. நாளை காலை விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடைபெறுகிறது. இதில் நூற்றுக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொள்வார்கள். பல்வேறு விதமான நாகரீக உடை அணிந்து போட்டியில் அணிவகுத்து வருவார்கள். அவர்களில் சிறந்த 3 அழகிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நாளை மறுதினம் அனைவரும் கூவாகம் கோவிலுக்கு செல்வார்கள். அங்கு தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு முழுவதும் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
பின்னர், 6-ந் தேதி காலை அரவாண் தேரோட்டம் மற்றும் களப்பலி நிகழ்ச்சி நடைபெறும். களப்பலி முடிந்ததும் திருநங்கைகள் வெள்ளை சேலை அணிந்து விதவை கோலம் பூண்டு, அழுது புலம்புவார்கள்.
அத்துடன், அவர்கள் அனைவரும் தங்கள் ஊருக்கு புறப்பட்டு செல்வார்கள். 8-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நடைபெறும். அத்துடன் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நிறைவு பெறும்.