காணாமல் போன குழந்தைகள் கதி என்ன? தனிப் பிரிவு ஏன் இல்லை? தமிழக அரசுக்கு ஹைகோர்ட் சரமாரி கேள்வி
சென்னை: தமிழ்நாட்டில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க மாவட்டந்தோறும் தனிப்பிரிவுகளை ஏன் அமைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை சென்டரல் அருகில் உள்ள வால்டாக்ஸ் சாலை ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்த 5 குழந்தைகள் காணாமல் போனது. இதுகுறித்து எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் நிர்மல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் நாகமுத்து மற்றும் பாரதிதாசன் ஆகிய நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தமிழ்நாட்டில் காணாமல் குழந்தைகளை கண்டுபிடிக்க ஏன் மாவட்டந்தோறும் தனிப்பிரிவு அமைக்கக்கூடாது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் கடத்தப்படும் குழந்தைகள் விலங்குகள் போல் நடத்தப்படுகின்றனர் என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதற்கு போலீசார் தரப்பில் இருந்து, ஆட்கடத்தல் தடுப்பு பிரிவில் உட்பிரிவு ஒன்றை ஏற்படுத்த இருப்பதாக கூறப்பட்டது. இதனை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும் காணாமல் போன குழந்தைகளின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா என்று பதில் அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.