மாயமான டோர்னியர் விமானம் கடலில் 10,000 அடி ஆழத்தில் கிடக்கலாம்: கடலோர காவல்படை ஐ.ஜி.
சென்னை: மாயமான டோர்னியர் விமானம் கடலுக்கு அடியில் 10 ஆயிரம் அடி ஆழத்தில் இருக்கலாம் என்று கடலோர காவல்படை ஐ.ஜி. எஸ்.பி. சர்மா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து கடந்த 8ம் தேதி பாக் ஜலசந்திக்கு ரோந்து பணிக்கு சென்ற கடலோர காவல்படையைச் சேர்ந்த டோர்னியர் விமானம் அன்று இரவு நாகை அருகே மாயமானது. விமானத்தில் விமானி, துணை விமானி என 3 பேர் இருந்தனர். சிதம்பரம் கடல் பகுதியில் விமானத்தை தேடும் பணியில் 18 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
விமானம் மாயமாகி 17 நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் விமானத்தில் இருந்த 3 பேரின் குடும்பத்தாரும் கடலோர காவல்படை ஐ.ஜி. எஸ்.பி. சர்மாவை புதன்கிழமை சந்தித்து பேசினர்.
அதன் பிறகு எஸ்.பி. சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
விமானம்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிநவீன ஆராய்ச்சி கப்பலான ஒலிம்பிக் கேன்யான் சிதம்பரம் வந்து மாயமான விமானத்தை கடலுக்கு அடியில் தேடியது. ஆனால் தடயம் எதுவும் கிடைக்காததால் அது திரும்பிச் சென்றது. நீர்மூழ்கிக் கப்பல்களும் விமானத்தை தேடியும் பலனில்லை.
அதிநவீன கப்பல்
மாயமான விமானம் குறித்து எந்த தடயமும் கிடைக்கவில்லை என கடலோர காவல்படை தலைமையகத்திடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமையகத்தில் இருந்து தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமான அதிநவீன கப்பல் சென்னை துறைமுகம் வந்துள்ளது. அந்த கப்பல் விமானத்தை தேடும் பணியில் வியாழக்கிழமை ஈடுபடும்.
தாமதம்
360 டிகிரி சாய்வாக விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்பதால் தான் தேடும் பணி தாமதம் ஆகிக் கொண்டிருக்கிறது. 5 முதல் 6 மைல் தூரம் சுற்றளவில் விமானம் எங்கு வேண்டுமானாலும் விழுந்திருக்கலாம் என்று நினைத்து தேடிக் கொண்டிருக்கிறோம்.
ஆழம்
விமானம் கடலுக்கு அடியில் 10 ஆயிரம் அடி ஆழத்தில் விழுந்து கிடக்கலாம். விமானத்தை தேட தனியார் நிறுவனங்களின் உதவி கோரப்பட்டுள்ளது. மாயமான விமானத்தில் இருந்த விமானிகளின் குடும்பத்தார் நம்பிக்கையுடன் காத்துள்ளனர் என்றார் சர்மா.
சுபாஷ் சுரேஷ்
மாயமான விமானி சுபாஷ் சுரேஷின் தாய் பத்மா சர்மாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில், என் மகன் நல்லபடியாக வீடு திரும்புவார் என்று நம்புகிறோம். கடலோர காவல்படையின் தேடல் பணி திருப்தி அளிப்பதாக உள்ளது. என் மகன் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு அந்த பணியில் சேர்ந்தார். விமானத்தை தேடும் பணியை நேரில் பார்க்க எங்களை அழைத்துச் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என் மகனின் வரவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.