விமான உற்பத்தி தேவையை பூர்த்தி செய்ய உள்நாட்டு அமைப்பு உருவாகிறது!
சென்னை: விமான படைக்கு தேவையான உற்பத்தியை உள்நாட்டிலேயே மேற்கொள்ளும் வகையிலான 'மிஷன் ஏரோபி' என்ற அமைப்பு புதிதாக துவங்கப்பட உள்ளது.
பெங்களூருவில் வரும் 29ம்தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் மிஷன் ஏரோபி அமைப்பின் துவக்கவிழா நடக்கிறது. இந்திய அறிவியல் கழகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் விமானப்படை தளபதி பாலி எச்.மேஜர் இந்த நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக கலந்து கொள்வார்.
ஜென்சர் ஏரோஸ்பேஸ் மற்றும் தகவல் தொடர்பு அறிவியல் தனியார் நிறுவன தலைமை செயல் அதிகாரி அனுராகர் மிஸ்ரா 'ஒன்இந்தியாவிடம்' இதுபற்றி கூறுகையில் "மிஷன் ஏரோபி என்பது தற்போது கிடைக்கும் வசதிகளை பயன்படுத்தி விமானப்படைக்கு முக்கிய பங்களிப்பை அளிப்பதாக இருக்கும். இந்திய தளத்தில் இருந்து விமானம் சார்ந்த பொருட்களை தயாரிக்க உதவுவோருக்கு ஏரோபி இணைப்பு பாலமாக இருக்கும். இந்திய விமான துறை, விஞ்ஞானிகள், அகாடமிஸ்ட், மாணவர்கள் உள்ளிட்டோரை இந்த அமைப்பின் துவக்க நிகழ்வுக்கு அழைத்துள்ளோம்.
விமானத்துறை சார்ந்த 10 கோடியில் இருந்து 1000 கோடிக்கு உட்பட்ட திட்டங்களை ஏரோபி அமைப்பின் 12 உறுப்பினர் நிர்வாக குழு ஆய்வு செய்து இறுதி செய்யும். ஏரோபி பிரிவுகள், விமான ஆய்வு நிறுவனங்கள் பலவற்றிலும் துவங்கப்படும். எங்கெங்கு சிறப்பான விமானத்துறை ஆய்வு நடக்கிறதோ அதையெல்லாம் நாங்கள் ஊக்குவிப்போம்" என்றார்.
எச்.ஏ.எல் அமைப்பின் முன்னாள் தலைமை சோதனை பைலட் உபாத்யாய் கூறுகையில், மேக் இன் இந்தியா கோஷம், மேக் இந்தியன் என்று மாற்றப்பட வேண்டும். இந்திய தளத்தில் இருந்துதான், அனைத்து விமான துறை உற்பத்தியும் நடைபெற வேண்டும். குவாட்-காப்டர் என்பதுதான் ஏரோபி தயாரிக்க உள்ள முதல் தயாரிப்பாகும். நான்கு சக்கரங்களை கொண்ட பறக்கும் இயந்திரம் இதுவாகும். தற்போது உலகமெங்கும் இதுபோன்ற இயந்திரங்கள் 50 ஆயிரத்திற்கும் மேல் உள்ளன. பெல்ஜியம் நாட்டு நிறுவனத்தோடு இணைந்து இந்த திட்டத்தை முடிக்க உள்ளோம் என்றார்.
குவாட்-காப்டர் வகை குட்டி விமானங்கள் குறுகிய இடத்திலும் டேக்-ஆப் ஆகக்கூடியவை. கண்காணிப்பு பணிக்கு பயன்படுத்த ஏற்றவை. இந்த வகை இயந்திரம் 20 கிலோ எடை கொண்டதாக இருக்கும். மொத்த திட்ட செலவு 5 முதல் 6 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு இருக்கப்போகிறது.