ஹாங்காங் பறந்த மு.க. அழகிரி... அதிகாலையில் ஏர்போர்ட்டிலும் துரத்திய 'ஸ்டாலின்' பஞ்சாயத்து
சென்னை: தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டாலும் அவ்வப்போது பிரளயத்தைக் கிளப்பி வரும் மு.க. அழகிரி நேற்று ஹாங்காங் புறப்பட்டுச் சென்றார். அந்த அதிகாலையிலும் கூட சென்னை விமான நிலையத்தில் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக்குவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, வந்து பதில் சொல்கிறேன் என அவர் நழுவினார்.
லயோலோ கல்லூரியின் கருத்துக்கணிப்பு அண்மையில் வெளியானது. இதில் தி.மு.க.வில் அடுத்த முதலமைச்சராக அக்கட்சியின் தலைவர் கருணாநிதியை விட பொருளாளராக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கே ஆதரவு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த மு.க.அழகிரி, திமுக என்றால் அது கருணாநிதிதான்; வேறு யாருமில்லை. கருணாநிதியைத் தவிர வேறு யாரையும் தி.மு.க. தொண்டர்கள் முதல்வராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 1.15 மணிக்கு தனது மனைவி காந்தியுடன் அழகிரி ஹாங்காங் புறப்பட்டு சென்றார்.
அப்போது அவரிடம், திமுகவில் சிலர் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என்று கூறி வருகிறார்களே? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இதற்கு இப்போது பதில் அளிக்க விரும்பவில்லை. வந்து சொல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.