ஜெ. சவப்பெட்டி வைத்து வாக்கு சேகரிப்பு... ஓபிஎஸ் அணிக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
ஜெயலலிதா சவப்பெட்டியை வைத்து வாக்கு சேகரித்த ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா சவப்பெட்டியை வைத்து வாக்கு சேகரித்த ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவின் சவப்பெட்டியை போன்று மாதிரியை தயார் செய்து ஓபிஎஸ் அணியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதற்கு சசிகலா அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் அந்த முயற்சியை கைவிட்டனர்.
எனினும் சவப்பெட்டியை வைத்து அரசியல் நடத்தும் ஓபிஎஸ் மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோரை கைது செய்ய கோரி ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் முன்பு சசிகலா அணியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த செயலுக்கு ஓபிஎஸ் அணிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சவப்பெட்டியை வைத்து வாக்கு சேகரிப்பது ஈவு இரக்கமற்ற, மனிதநேயமற்ற செயல். அநாகரிக பிரசாரம் நடத்தும் பாண்டியராஜனை திமுக சார்பில் கண்டிக்கிறேன். இந்த பிரசாரத்துக்கு அனுமதி அளித்த ஓ.பன்னீர் செல்வத்தையும் கண்டிக்கிறேன்.
இதய தெய்வம் என புகழ்ந்த ஜெயலலிதாவுக்கு ஓபிஎஸ் செலுத்தும் நன்றிக் கடன் இதுதானா. இந்த பிரசாரம் பாண்டியராஜனுக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் ஜெயலலிதா மீதான வன்மத்தையே காட்டுகிறது. சுயலாபத்துக்காக ஜெ.உருவத்தை எந்த எல்லைக்கும் எடுத்து செல்வர் என சாடியுள்ளார்.