சட்டசபை குழுக்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சட்டசபை குழுக்கள் அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மு.க. ஸ்டாலின் சந்தித்தார்.
சென்னை: சட்டசபை குழுக்களை உடனே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான முக ஸ்டாலின் இன்று நேரில் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சிகளைக் கொண்ட சட்டசபை குழுக்களை தமிழக அரசு இதுவரை அமைக்கவில்லை. இந்த குழுக்களை உடனே அமைக்க வேண்டும் என ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் இந்த விவகாரத்தில் சபாநாயகர் எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. இதனையடுத்து இன்று கிண்டி ஆளுநர் மாளிகையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து சட்டசபை குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார் ஸ்டாலின்.
ஆளுநரிடம் புகார் கொடுத்த பின்னரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் சட்டசபை கூடும் போது சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.