கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை வீட்டுக்கு போய் ஸ்டாலின் சந்திப்பு,, ஏன் தெரியுமா?
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை இன்று நேரில் சென்று சந்தித்து பேசினார்.
சென்னை: தியாகராயர் நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வீட்டிற்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று திடீரென சென்றார். அங்கு அவரை சந்தித்து பேசினார்.
1942ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி அன்று முரசொலி பத்திரிகை தொடங்கிய நாளாகும். கையெழுத்துப் பிரதி வடிவத்தில் மாத இதழாக வெளிவந்து கொண்டிருந்த முரசொலி 1948ல் வார இதழாகவும், 1960ல் நாளேடாகவும் அச்சில் வெளிவரத் தொடங்கியது.
திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி வெளியாகி 75 ஆண்டுகள் ஆகின்றன. முரசொலியின் பவள விழா ஆண்டு திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் முரசொலியின் பவள விழா பிரமாண்டமாக திமுகவினரால் கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவிற்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்து அழைத்துள்ளார்.