ஆர்.கே.நகரில் திமுக ஓட்டுகளுக்கு நேரப் போகும் கதி... சேகர்பாபு வார்னிங்... ஸ்டாலின் ஷாக்
ஆர்.கே.நகரில் திமுக ஓட்டுகளுக்கு ஏற்படப் போகும் நிலைமை குறித்து எம்.எல்.ஏ. சேகர் பாபு வெளிப்படையாக பேசியிருப்பது ஸ்டாலினை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம்.
சென்னை: ஆர்.கே.நகரில் திமுக ஓட்டுகள் என்னவாகும் என்பது குறித்து சேகர் பாபு வெளிப்படையாக பேசியது அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வாக்குகள் சிதறிக் கிடக்கின்றன. இதனால் திமுக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இதற்கேற்ப திமுகவில் சாதாரண தொண்டராக இருக்கும் மருது கணேஷை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இது திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
மா.செ.க்கள் கூட்டம்
இத்தேர்தல் பணிகள் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஸ்டாலின், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்ட செயலர்கள் மட்டும் ஆர்கே நகர் தேர்தல் களப்பணிக்கு வந்தால் போதும் என கூறிவிட்டார்.
உள்ளூர் திமுகவினர்...
அத்துடன் உள்ளூர் திமுகவினரை அதிக அளவு பயன்படுத்தினால்தான் அவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்தல் பணியாற்றுவர் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார் ஸ்டாலின். இந்த கூட்டத்தில் சேகர் பாபு எம்.எல்.ஏ பேசிய விவரம் ஸ்டாலினை கடுமையாக அதிர்ச்சியடைய வைத்ததாம்.
திமுக ஓட்டு பர்சேஸ் ஆக கூடாது
ஆர்.கே.நகர் தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர் சேகர் பாபு . அந்த அனுபவத்தின் அடிப்படையில், அதிமுக வாக்குகள் சிதறிக் கிடந்தாலும் அவை நமக்குக் கிடைக்காது. அதே நேரத்தில் நம்முடைய கட்சி வாக்குகள் அதிமுகவின் எந்த ஒரு அணியாலும் விலை போய்விடக் கூடாது என்பதுதான் மிக முக்கியம். அப்படி விலைபோனால் வெல்வது கடினம் என வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.
அதிர்ச்சியில் ஸ்டாலின்
சேகர் பாபுவின் இந்த வெளிப்படையான பேச்சால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்தாராம். தற்போது திமுக தமக்கு இருக்கும் வாக்குகளைத் தக்க வைக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாம்.