தொடர்ந்து புறக்கணிக்கும் ஸ்டாலின்... கடும் அதிருப்தியில் கனிமொழி
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து புறக்கணித்தே வருவதால் ராஜ்யசபா எம்.பி. கனிமொழி தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தம்மை தொடர்ந்து புறக்கணிப்பதால் ராஜ்யசபா எம்.பி. கனிமொழி கடும் அதிருப்தியில் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தில் அரசியலில் பலரும் தலை எடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரையும் ஓரம் கட்டி தம்மை செயல் தலைவர் நிலைக்கு உயர்த்தி கொண்டுவிட்டார் ஸ்டாலின்.
அதுவும் ஸ்டாலினுக்கு இணையான செல்வாக்குடன் இருந்த அழகிரி திமுகவை விட்டுமட்டுமல்ல அரசியலைவிட்டே ஒதுங்கிவிட்டார். தற்போது ஸ்டாலின் தங்கை கனிமொழி மட்டுமே திமுகவில் பொறுப்பில் இருந்து வருகிறார்.
துணை பொதுச்செயலர்
ஸ்டாலின் செயல் தலைவரானபோதே கனிமொழிக்கு துணைப் பொதுச்செயலர் பதவி கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால் ஸ்டாலின் தரப்பு இதை முற்றாக நிராகரித்துவிட்டது.
கனிமொழி புறக்கணிப்பு
அண்மையில் ஸ்டாலின் டெல்லி சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தனர். இச்சந்திப்புகளுக்கான ஏற்பாடுகளை ராஜ்யசபா எம்.பி.யான கனிமொழியிடம் ஸ்டாலின் ஒப்படைக்கவில்லையாம்.
திருச்சி சிவா, சபரீசன்
ஜனாதிபதியிடம் நேரம் கேட்கும் பொறுப்பை திருச்சி சிவாவிடம் ஒப்படைத்திருக்கிறார் ஸ்டாலின். அதேபோல் சோனியாவை சந்திக்கும் ஏற்பாடுகளுக்கு மருமகன் சபரீசனைத்தான் தேர்வு செய்தாராம் ஸ்டாலின்.
கனிமொழி தரப்பு அதிருப்தி
இப்படி தொடர்ந்து தம்மை ஒதுக்கி வைக்கும் ஸ்டாலின் தரப்பின் நடவடிக்கையால் கனிமொழி கடும் அதிருப்தியில் இருந்து வருகிறதாம். ஏற்கனவே ஸ்டாலின் மீது அதிருப்தியில் இருக்கும் திமுக நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் பணியை கனிமொழி தரப்பு தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.