இரண்டு விஷயங்களில் முந்திக்கொண்ட ஸ்டாலின்... திமுகவுக்கு சாதகமா?
ஸ்டாலின் திமுகவின் செயல் தலைவர் ஆனதில் இருந்தே அவரது செயல்பாடுகள் வித்தியாசமாக உள்ளன. நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் நடந்துகொண்டது, சபாநாயகர் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்து தோற்றது, கனிமொழியை ஒதுக்கி வைப்பது, ஆர்கே நகர் இடைதேர்தலில் புது வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுத்தது என்று ஸ்டாலின் செயல்பாடுகளுக்கு ஆதரவும் எதிர்ப்பும் பெருகுகிறது. ஆனால் நேற்று ஸ்டாலின் செய்தது திமுகவுக்கு பலமாகத்தான் அமைந்தது.
ஆர்கே நகர் இடைதேர்தலில் அதிமுக உடைந்து ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், தினகரன் தலைமையில் ஒரு அணியும் தேர்தலை சந்திக்கிறது. இரு அணிகளுமே இன்னும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை அறிவிக்கவில்லை. கூட்டம் சேர்வார்களா என்ற தயக்கம்தான் காரணம். முதல்வர் கலந்துகொண்ட விழாக்களிலேயே கூட்டம் சேர்க்க திணறினார்கள். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூட்டம் சேரவில்லை என்றால் அது தங்களுக்கு மைனஸாக போய்விடுமே என்று தயங்கினார்கள்.
ஆனால் ஸ்டாலின் எந்த தயக்கமும் இன்றி நேற்று கூட்டத்தைக் கூட்டி தனது பலத்தைக் காட்டிவிட்டார். நேற்று கூட்டணித்தலைவர்களுடன் இணைந்து ஸ்டாலின் கலந்துகொண்ட கூட்டத்தில் நல்ல கூட்டம் காணப்பட்டது.
இதேபோல் ஜெயலலிதாவின் மரண மர்மத்தை ஓபிஎஸ் கையில் எடுப்பார், அதன் மூலம் அவருக்கு பெண்கள் ஓட்டு கிடைக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் அந்த விஷயத்தை பேச ஏனோ ஓபிஎஸ் இன்னும் தயங்குகிறார். நேற்று ஸ்டாலின் அதனைக் கையில் எடுத்துவிட்டார். நேற்று கூட்டத்தில் ஜெயலலிதா மரண மர்மத்தை பற்றி பேசினார். ஓபிஎஸ்சையும் விடாமல் விமர்சித்தார். இது எல்லாமே திமுகவுக்கு சாதகமான விஷயங்கள்தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.