ஜெ.,கார் டிரைவர் கனகராஜ் மர்ம மரணம்.. ஓபிஎஸ் கோஷ்டி எம்.எல்.ஏ ஆறுக்குட்டியிடம் போலீஸ் விசாரணை
கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக ஓ.பி.எஸ். அணி எம்.எல்.ஏ., ஆறுகுட்டி ஆத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகினார்.
ஆத்தூர்: ஜெயலலிதாவின் கார் டிரைவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து, ஆத்தூர் காவல்நிலையத்தில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார். அவரிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் கடந்த மாதம் 28ம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தார். கனகராஜின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
இதுதொடர்பாக கனகராஜின் அண்ணன் தனபாலை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பினர். அதன்படி கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் வைத்து நேற்று 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது, விபத்தில் கனகராஜ் இறப்பதற்கு முன் கவுண்டாம்பாளையம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டிக்கு பல முறை மொபைல் போனில் அழைத்திருந்ததாக தெரிய வந்தது. இதையடுத்து எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆத்தூர் போலீசார் சம்மன் கொடுத்தனர்.
இந்நிலையில் ஆத்தூர் காவல் நிலையத்தில் இன்று நேரில் ஆஜராகினார் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி. அவரிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆறுக்குட்டி தற்போது ஓ.பி.எஸ் அணியில் இருக்கிறார்.