அலங்காநல்லூருக்கு நள்ளிரவு வந்து இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் கருணாஸ் எம்எல்ஏ!
அலங்காநல்லூரில் போராடி வரும் இளைஞர்களுக்கு நள்ளிரவில் வந்து நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் ஆதரவு தெரிவித்தார்.
மதுரை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி நள்ளிரவை தாண்டியும் அமைதிப் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களை நடிகர் கருணாஸ் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் மையமாக அலங்காநல்லூர் உருவெடுத்துள்ளது. அலங்காநல்லூரில் திங்கள்கிழமை காலை முதலே அமைதி வழி போராட்டத்தை இளைஞர்கள் முன்னெடுத்தனர்.
இப்போராட்டம் நள்ளிரவை தாண்டியும் செவ்வாய்க்கிழமையும் அதிகாலையும் தொடர்ந்தது. இளைஞர்களுக்கு ஆதரவாக கிராம மக்களும் கை கோர்த்துள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் இளைஞர்களின் போர்க்களமாக இருக்கிறது. அங்கேயே உர சாக்குகளிலும் தரையிலும் படுத்து இளைஞர் படை கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடும் என படுத்துக் கொண்டிருக்கிறது.
இதனிடையே நள்ளிரவில் நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் போராட்ட களத்துக்கு நேரில் வந்து இளைஞர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது, இளைஞர்களின் உணர்வை ஒரு தமிழனாக, மண்ணின் மைந்தனாக பாராட்டுகிறேன் என கூறினார்.