டிடிவி தினகரன் அளித்த பதவியை ஏற்பேன்- எம்எல்ஏ கதிர்காமு திடீர் பல்டி
டிடிவி தினகரன் எனக்களித்த பதவியை ஏற்று அதை பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன் என்று எம்எல்ஏ கதிர்காமு கூறியுள்ளார்.
சென்னை: எந்த தயக்கமும் இல்லாமல் டிடிவி.தினகரன் அளித்த பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட உள்ளதாக பெரியகுளம் தொகுதி எம்எல்ஏ கதிர்காமு கூறியுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க கடந்த 4ஆம் தேதியுடன் அமைச்சர்களுக்கு தினகரன் விடுத்த கெடு முடிவடைந்ததால், தன்னுடைய முதல் அதிரடியாக புதிய நிர்வாகிகள் பட்டியலை தினகரன் வெளியிட்டார். இதில் 19 எம்எல்ஏக்களுக்கும் பதவி அளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து தினகரன் அளித்த இணைச்செயலாளர் பதவி தங்களுக்கு வேண்டாம் என்று எம்.எல்.ஏ-க்கள் ஸ்ரீபெரும்புதூர் பழனி, திருப்பரங்குன்றம் போஸ், பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம், பெரியகுளம் கதிர்காமு உள்ளிட்டோர் மறுத்துவிட்டனர்.
மதுரையில் கடந்த 5ஆம் தேதி அமைச்சர் உதயகுமாருடன் பேட்டியளித்த எம்.எல்.ஏ.,போஸ் எனக்கு உடல்நிலை சரியில்லாததால் பதவி ஏற்க முடியவில்லை,மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கே என்னுடைய ஆதரவு என்று தெரிவித்திருந்தார்.
பெரியகுளம் எம்எல்ஏ கதிர்காமு
இதேபோல எம்எல்ஏ கதிர்காமுவும் உடல்நலக்குறைவு காரணமாக பதவியை ஏற்கமுடியாது என்று தெரிவித்தார். இந்த நிலையில் திடீரென பெரியகுளம் எம்எல்ஏ கதிர்காமு, தினகரன் அளித்த மருத்துவரணி இணைச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.
கதிர்காமு ஏற்பு
தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி.தினகரன் எனது மருத்துவ சேவையை பாராட்டி, கட்சியில் முக்கிய பொறுப்பை அறிவித்தார். உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, அதை ஏற்க முடியாது என்றேன்.
சிறப்பாக செயல்படுவேன்
அதற்குள்ளாக ஊடகங்களில் தேவையற்ற சர்ச்சை, குழப்பம் ஏற்படும் நிலை உருவாகியது. இதனால், எந்த தயக்கமும் இல்லாமல் டிடிவி.தினகரன் அளித்த பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட உள்ளேன் என்று கூறினார்.
பல்டியடித்த எம்எல்ஏக்கள்
இதேபோல தினகரன் அளித்த கட்சிப்பதவியை நிராகரித்த கட்சிப்பதவியை ஏற்பதாக ஏ.கே. போஸ் , தற்போது பதவியை ஏற்பதாக கூறியுள்ளார். அதேபோல எம்எல்ஏ முத்தையாவும் கட்சிப்பதவியை ஏற்பதாக கூறியுள்ளார்.