ஜெ. வரவேற்பில் செங்கோட்டையன் "திடீர்” மயக்கம்- அமைச்சர் பதவி கிடைக்காத அதிர்ச்சி?
சென்னை: சென்னையில் நேற்று தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை வரவேற்க நின்றிருந்த செங்கோட்டையன் எம்.எல்.ஏ மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஜெயலலிதாவின் புதிய அமைச்சரவையில் செங்கோட்டையனுக்கும் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து போனதால் அதிர்ச்சியில் அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை வரவேற்பதற்காக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அங்கு திரண்டிருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த செங்கோட்டையன் எம்.எல்.ஏ. திடீரென்று மயங்கினார்.
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர் கீழே விழுந்து விடாமல் பிடித்தனர். எம்.எல்.ஏக்கள் சிலர் அவருக்கு தண்ணீர் கொடுத்தனர்.
ஜெயலலிதாவின் புதிய அமைச்சரவையில் செங்கோட்டையனும் இடம்பெறுவார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் அமைச்சரவை பட்டியலில் செங்கோட்டையனின் பெயர் இல்லை. இதைக் கேள்விபட்டு செங்கோட்டையன் மயக்கமடைந்தாரா? அல்லது வெயிலால் மயக்கமடைந்தாரா என தெரியாமல் அதிமுகவினர் குழம்பி நின்றனர்.