இதுக்காகத்தான்.. ஓபிஎஸ் கூட நான் போகல.. தோப்பு வெங்கடாச்சலம் அதிரடி விளக்கம்
ஓபிஎஸ் அணிக்கு போகாமல் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் ஏன் இருந்தேன் என எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் அதிரடி விளக்கம் அளித்துள்ளார்.
பெருந்துறை: ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. அப்போது ஓபிஎஸ் அணிக்கு செல்லாமல் ஏன் எடப்பாடி பழனிச்சாமி அணியிலேயே தொடர்ந்தேன் என்பதை எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.
மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ தியானத்தில் அமர்ந்த பின்னர் அதிமுகவில் அதிரடி திருப்பங்கள் பல நிகழ்ந்தன. முன்னாள் இன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு தாவினர்.
அப்போது, தான் ஏன் ஓபிஎஸ் அணியோடு போகவில்லை என்பதை பெருந்துறை தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் கூறியுள்ளார். திங்கள்கிழமை தனது ஊர் பெருந்துறையில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினார். அதில் அவர் பேசியதாவது:
போன் மேல் போன்
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர் கூவத்தூர் முகாமில் நானும் இருந்தேன். அப்போது, எனக்கு ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான போன் கால்கள் வந்தன.
ஓபிஎஸ்தான் உண்மையான அதிமுக
மறுமுனையில் இருந்து பேசிய அனைவருமே நூற்றுக்கு 99 பேர், நீங்கள் எடப்பாடி பழனிச்சாமி முகாமில் இருக்காதீர்கள். அதிமுக தொண்டர்கள் ஓபிஎஸ் தலைமையைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்று கூறினார்கள்.
அதிமுக தொண்டன் மனநிலை
மேலும், நீங்கள் ஓபிஎஸ் அணிக்கு செல்லுங்கள் என்று பலரும் வற்புறுத்தினார்கள். எனக்கு அப்போதே அதிமுக தொண்டர்களின் மனநிலை தெரிந்துவிட்டது. மக்கள் மனநிலை ஓபிஎஸ்ஸையே விரும்புகிறது என்று எனக்கு புலப்பட்டது.
இதுதான் காரணம்
ஆனாலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்க வேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டுவிட்டது. அதிமுக ஆட்சி கலைந்துவிடக் கூடாது என்று எண்ணியே அந்த அணியில் நான் இருந்தேன் என்று தோப்பு வெங்கடாச்சலம் கூறினார்.