எம்எல்ஏக்கள் பணபேரம் பற்றி கேள்வி கேட்ட ஸ்டாலின் - சட்டசபையில் கூச்சல் குழப்பம்
எம்எல்ஏ சரவணன் கூறிய பணபேரம் குறித்து விவாதிக்க திமுக சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தியதால் சட்டசபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
சென்னை: எம்எல்ஏ சரவணன் விவகாரம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியை ஏற்க சபாநாயகர் தனபால் மறுத்து விட்டார். இதனால் சட்டசபையில் கூச்சல் குழப்பம் நிலவியுது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
கேள்வி நேரம் தொடங்கியது எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். இதனையடுத்து நேரமில்லாத நேரத்தில், முக்கிய பிரச்சினையை எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் எழுப்பினார்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் பணபேரம் குறித்து தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேச முற்பட்டார். அவர் கேள்வி எழுப்பவே சட்டசபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
பணபேரம் குறித்து அவையில் பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் தனபால் தெரிவித்தார். மேலும் பணம் பெற்றதாக கூறப்படுவதை சம்மந்தப்பட்ட எம்எல்ஏ மறுத்துள்ளதால் சபையில் பேச வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் சபையில் பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்தார்.
எம்எல்ஏ சரவணன் வீடியோ குறித்து திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் தொடர்பாக விவாதிக்க சபாநாயகர் மறுத்ததை தொடர்ந்து சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டதால் அமளி துமளி ஏற்பட்டது.
பணபேரம் குறித்து சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மறுத்துள்ளதால் விவாதிக்க தேவையில்லை என்று கூறியதை அடுத்தே அமளி துமளி ஏற்பட்டது. இதனால் பேரவை முடங்கியது.