ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகள் தயார்.. அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் தலைமைச்செயலகம் வருகை!
சென்னை தலைமைச் செயலகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக எம்எல்ஏக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
சென்னை: தமிழக சட்டசபை செயலாளர் அலுவலகத்தில் நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக சட்டசபை உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் வந்துள்ளனர்.
நாட்டின் 14வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. அந்தந்த மாநில எம்எல்ஏக்கள் அவர்கள் சார்ந்த சட்டசபை வளாகத்தில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக தலைமைச் செயலகத்தில் வாக்களிப்பதற்காக காலை 8.30 மணிக்கு முன்னதாகவே திமுக எம்எல்ஏக்கள் தலைமைச் செயலகம் வந்தனர். திமுக எம்எல்ஏக்களும் வரத் தொடங்கினர். சட்டசபை செயலாளர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பூபதி அறையில் உள்ள கூட்ட அரங்கில் தேர்தல் நடைபெறுகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. எம்எல்ஏக்களுக்கு பிங்க் நிற வாக்குச் சீட்டும், எம்பிகளுக்கு பச்சை நிற வாக்குச் சீட்டும் அளிக்கப்பட உள்ளது. பொன்.ராதாகிருஷ்ணன் எம்பி, 233 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும், நேரில் வருபவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.
பாஜக வேட்பாளர் ராம்நாத்கோவிந்த்திற்கு ஆதரவாக அதிமுக அணிகள் சார்பில் 2 முகவர்களும், காங்கிரஸ் வேட்பாளர் மீராகுமார் சார்பாக திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் இரண்டு முகவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரே ஒரு வாக்குப்பெட்டி தான் வைக்கப்பட்டுள்ளது, வாக்குப் பதிவு முடிந்தவுடன் டெல்லிக்கு எடுத்துச்செல்லப்பட உள்ளன. இரண்டு வாயில்கள் வழியாக வாயல் எண் 4 மற்றும் வாயல் எண் 5 வழியாக எம்பி, எம்எல்ஏக்கள் வாக்களிக்க செல்லலாம்.