மக்கள் வறுமையால் வாடும் நிலையில் சம்பள உயர்வு தேவையா? எம்எல்ஏக்களுக்கு ஹைகோர்ட் கிளை நறுக்!
மக்கள் வறுமையால் வாடும் நிலையில் சம்பள உயர்வு தேவையா என ஹைகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை: மக்கள் வறுமையால் வாடும் நிலையில் சம்பள உயர்வு தேவையா என ஹைகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏக்களுக்கான ஊதியத்தை அண்மையில் இருமடங்காக உயர்த்தி அறிவித்தார். விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் இதுகுறித்து பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் வறட்சியால் விவசாயம் பாதித்துள்ளது. பலர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர்.
விவசாயிகள் தற்கொலை
கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பளம் 55 ஆயிரத்திலிருந்து, ஒரு லட்சத்து 5000 ரூபாயாக ஜூலை 19 ல் அரசு உயர்த்தியுள்ளது.
சம்பள உயர்வை நிறுத்த வேண்டும்
இதை நிறுத்தி வைக்க தமிழக தலைமைச் செயலர், நிதித்துறை செயலர், சட்டசபை செயலர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரமேஷ் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதிகள் வேதனை
இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சாமிநாதன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், விவசாயிகள் தற்கொலை, கல்வி கட்டணம் செலுத்த இயலாத நிலையில் மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என வேதனை தெரிவித்தனர்.
சம்பள உயர்வு தேவையா?
இந்நிலையில், சம்பள உயர்வு தேவையா என்பதை எம்.எல்.ஏ.,க்கள் தங்களுக்குள்ளே கேள்வி எழுப்பி சிந்திக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் தமிழக நிலை குறித்து அரசுதான் தீர்மானிக்க முடியும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கு தள்ளுபடி செய்தனர்.