இணைப்பில் இழுபறி.. ஜெ. சமாதியில் இருந்து கிளம்பினர் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள்
ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்த ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் இணைப்பில் இழுபறி ஏற்பட்டதால் அங்கிருந்து புறப்பட்டனர்.
சென்னை: ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்தனர். ஆனால் இணைப்பில் இழுபறி ஏற்பட்டதால் எம்எல்ஏக்கள் அனைவரும் நினைவிடத்தில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
நீண்ட இழுபறிக்குப் பின்னர், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இன்று இணையும் வாய்ப்பு சூழல் உருவானது. ஓபிஎஸ் பிரிவை அறிவித்த ஜெயலலிதாவின் நினைவிடத்திலேயே 2 அணிகளும் இணையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இதனால், இன்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்கள் வருவார்கள் என்பதால் மெரினாவில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் மெரினாவிற்கு வருகை தருவார்கள். இரண்டு அணிகளும் இணைந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் அதிமுவின் இரண்டு அணிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து காத்துக் கிடந்தனர்.
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் 7.30 மணி போல் ஜெயலலிதா நினைவிடத்தின் முன் ஒன்றிணைவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த எம்எல்ஏக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இரவு 8.30 மணியைக் கடந்தும் முன்னாள் இன்னாள் முதல்வர்கள், அமைச்சர்கள் என யாரும் மெரினாவிற்கு வரவில்லை.
இதனையடுத்து, எம்எல்ஏக்களுக்கு இணைப்பில் இழுபறி இருப்பது தெரிய வந்தது. பின்னர், எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து புறப்பட்டனர்.