திமுக கூட்டணியில் இணைந்தது ம.ம.க: மு.க. ஸ்டாலினுடான பேச்சுவார்த்தைக்குப் பின் ஜவாஹிருல்லா அறிவிப்பு
சென்னை: திமுக- காங்கிரஸ் கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சென்னையில் இன்று சந்தித்து பேசுவார்த்தை நடத்திய பின் மமக தலைரான ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அதிகாரப்பூர்வமாக இதை அறிவித்தார்.
ஜவாஹிருல்லா தலைமையில் செயல்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கடந்த 2009-ம் ஆண்டு மனிதநேய மக்கள் கட்சியானது. அப்போது நடந்த லோக்சபா தேர்தலில் மமக தனித்து போட்டியிட்டது.
2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் மமக இணைந்தது. அக் கட்சிக்கு ராமநாதபுரம், ஆம்பூர், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லாவும், ஆம்பூரில் அஸ்லம்பாஷாவும் வெற்றி பெற்றனர். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட தமீமுன் அன்சாரி தோல்வி அடைந்தார்.
திமுகவுடன் கூட்டணி
ஆனால் பின்னர் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி, திமுகவின் கனிமொழிக்கு ஆதரவாக வாக்களித்தது. 2014-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் திமுக கூட்டணியில் நீடித்தது. அக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் தோல்வியை தழுவியது.
மக்கள் நலக் கூட்டியக்கத்தில்...
தேர்தலுக்கு பிறகு திமுகவுடன் கூட்டணி இல்லை என்று மனித நேய மக்கள் கட்சி அறிவித்தது. அத்துடன் வைகோ, திருமாவளவன், இடதுசாரிகள் உருவாக்கிய மக்கள் நலக்கூட்டு இயக்கத்தில் மமக இணைந்து செயல்பட்டு வந்தது. பின்னர் மக்கள் நலக் கூட்டணியாக அந்த இயக்கம் மாற்றப்பட்டதும் அதில் இருந்து மமக வெளியேறியது.
அதிமுக ஆதரவு
அதனைத் தொடர்ந்து அதிமுகவுக்கு ஆதரவான நிலையில் மமக இருந்து வந்தது. இதனிடையே ஜவாஹிருல்லாவுக்கும், பொதுச்செயலாளராக இருந்த தமீமுன் அன்சாரிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தமீமுன் அன்சாரி மனிதநேய ஜனநாயகக் கட்சி என்ற தனிக்கட்சியை தொடங்கினார். இந்த கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் எனக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. கடந்த ஞாயிறன்று அதிமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஜெயலலிதா சந்தித்து பேசினார். அப்போது ஜவாஹிருல்லாவுக்கும் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் போயஸ் தோட்டம் செல்லவில்லை.
திமுக-மமக கூட்டணி
இந்நிலையில் புதிய திருப்பமாக திமுக கூட்டணியில் இணைய மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இன்று திமுக பொருளாளர் முக ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஜவாஹிருல்லா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இச்சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் என்று அறிவித்தார்.
முஸ்லிம் கட்சிகள்...
ஏற்கனவே திமுக- காங். கூட்டணியில் காதர் மொகிதீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்றுள்ளது. தற்போது மனிதநேய மக்கள் கட்சியும் திமுக அணியில் இடம்பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயகக் கட்சியும் திமுக கூட்டணியில் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.