மோடி மட்டும்தானா நாங்களும் எடுப்போம்ல செல்ஃபி... மநகூ தலைவர்களுக்கு குவியும் லைக்ஸ்
சென்னை: மக்கள் நலக் கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தை உற்சாகமாக தொடங்கிய கையோடு அதன் தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன், இரா.முத்தரசன் ஆகியோர் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருமாவளவன் செல்ஃபி எடுக்க மற்ற தலைவர்கள் புன்னகையுடன் போஸ் கொடுத்திருக்கின்றனர். இந்த செல்ஃபியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
"இது ஊழலை ஒழிக்கும் செல்பி, மீத்தேன் திட்டம் தடுக்கும் செல்பி, மதுவிலக்கு அமலாக்கும் செல்பி, தீண்டாமை ஒழிக்கும் செல்பி, கொள்கை அரசியல் முழங்கும் செல்பி ..." என்று தெரிவித்திருக்கிறார் ஜி.ராமகிருஷ்ணன்.
வைரலாகும் செல்பி
ஜி. ராமகிருஷ்ணன் பதிவிட்டுள்ள அந்த செல்ஃபியை #makkalnaselfie #mnkselfie #makkalnalan makkalnalan.in ஆகிய ஹேஷ்டேகுகள் கீழ் டிரண்டாக செய்திருக்கிறார்கள்.
மோடியின் செல்ஃபி
செல்ஃபி எடுக்கும் அரசியல் தலைவர்களில் மோடிக்கே இன்றளவும் முதலிடம் என்றாலும் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களின் இந்த முதல் செல்ஃபி சற்றே சிறப்பானதாக உள்ளது.
செல்ஃபியும் 5 கொள்கைகளும்
காரணம் செல்ஃபியுடனே இருக்கும் படவிளக்கம். "இது ஊழலை ஒழிக்கும் செல்ஃபி, மீத்தேன் திட்டம் தடுக்கும் செல்ஃபி, மதுவிலக்கு அமலாக்கும் செல்ஃபி, தீண்டாமை ஒழிக்கும் செல்ஃபி, கொள்கை அரசியல் முழங்கும் செல்ஃபி..." என செல்ஃபியுடன் 5 கொள்கைகள் விளக்கப்பட்டிருக்கின்றன.
குவியும் லைக்குகள்:
இந்த செல்ஃபி பதிவேற்றப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளன கூடவே மக்கள் தங்கள் கருத்துகளையும் பதிவு செய்துள்ளனர். மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் செல்ஃபிக்கு டேக் லைன் வைத்த பாணியிலே இந்த செல்ஃபி கூடங்குளம் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.. இந்த செல்ஃபி முல்லை பெரியாறு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
தேர்தல்வரை நீடிக்கவேண்டும்
மக்கள் நலக் கூட்டணி தோற்றுவிக்கப்பட்டபோதே மக்கள் பிரச்சினைகளுக்காக ஒன்றாக குரல் கொடுப்போம் என்ற கொள்கை முழங்கப்பட்டது.
அது இப்போது அவர்களது செல்ஃபியிலும் பிரத்பலித்துள்ளது . இந்த ஒற்றுமை தேர்தல் வரைக்கும் நீடிக்கவேண்டும் என்பதே
மக்கள் நலக்கூட்டணியை விரும்பும் வாக்காளர்களின் மனநிலையாக உள்ளது.
"நல்ல பிள்ளைகள்" என்று பெயருடன் உலா வரும் இந்த தலைவர்கள் இன்று முதல் "செல்பி புள்ளைகள்" என்றும் அழைக்கப்படுவார்களாக!