டச் பண்ணா போலீஸ் வருவாங்க… இது மதுரை அதிரடி
மதுரை: ஆபத்து காலங்களில் உதவிக்கு வருவதோடு கண்ணீரை துடைக்கின்றன கரங்களாக இருக்கவேண்டும் என்பதுதான் காவல்துறையினர் மீதான மக்களின் எதிர்பார்ப்பு. திருட்டோ, வழிப்பறியோ, கொலையோ கொள்ளையோ நடந்து முடிந்து யாராவது தகவல் சொல்லி மெதுவாக வந்து (சில நேரங்களில் விரைந்து வந்து) விசாரணை செய்வதுதான் காவலர்களின் பணியாக உள்ளது. இதனால் ஆபத்து காலங்களில் காவல்துறை வந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கையே மக்களுக்கு அற்றுப் போய் விட்டது. ஆனால் காவல்துறை உங்கள் நண்பன் என்ற வார்த்தைக்கு வடிவம் கொடுக்கும் வகையில் மதுரை மாநகர போலீசார் செயல்பட்ட வருகின்றனர் பாராட்டு தெரிவிக்கின்றனர் மதுரைவாசிகள்.
காரணம் சமீபத்தில் மாநகர போலீசில் ‘வாட்ஸ் அப்', ‘பேஸ்புக்'கையும் ஆபத்து காலங்களில் உடனடியாக புகார் தெரிவிக்கும் ஆப்ஸ் ஒன்றினையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தனி இணையதளம்
மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதன் பேரில் பொதுமக்கள் எளிதில் புகார் செய்யக்கூடிய வகையில் மதுரை மாநகர போலீசாருக்கு என்று தனியாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேசன், ‘வாட்ஸ் அப்', பேஸ்புக் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்த முடியும்.
கணினி உதவியுடன்
மதுரை மக்களின் நலனுக்காக கணினி உதவியுடன் குற்ற தடுப்புப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர போலீஸ் இணையதளத்தில் (www.maduraicitypolice.com) அன்றாட நிகழ்வுகள், முன்கூட்டியே அறியக்கூடிய முக்கிய தகவல்கள், தமிழ்நாடு காவல்துறை இணையதளம் செல்வதற்குண்டான தகவல்கள் மற்றும் மாநில அளவிலான இந்தியா முழுவதும் இருந்தும் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
மொபைல் அப்ளிகேசன்
அடுத்ததாக ஆன்ட்ராய்டு செல்போன் பயன்படுத்துவோருக்கு உபயோகமாக மொபைல் போன் அப்ளிகேசன் மதுரை போலீசாரல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் செல்போனில் MaduraiCity@Androidapp பதிவிறக்கம் செய்து கொண்டால் மாநகரில் போக்குவரத்து குறித்த தகவல்கள், இணையதளம் மூலம் புகார் அளித்தல் மற்றும் SOS (save our soul) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எஸ்.ஓ.எஸ் வசதி
இந்த எஸ்.ஓ.எஸ். வசதி பெண்கள் பாதுகாப்பு மற்றும் முக்கியமான தருணத்தில் ஆபத்தான சூழ்நிலைகளில் இருப்பவர்கள் தங்களை பாதுகாப்பதற்கான வசதி ஆகும். பெண்கள் ஆபத்தான நிலையில் இருக்கும் போது தங்களது போனில் எஸ்.ஓ.எஸ். மூலம் தகவல் தெரிவித்தால், எஸ்.ஓ.எஸ்.சில் உள்ள ஜி.பி.எஸ். மூலம் எங்கிருந்து தகவல் வந்தது என்பதை அறிந்து போலீசாரால் அவர்களுக்கு உதவ முடியும். இது பெண்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் வரும் புகார்களை 24 மணிநேரமும் போலீசார் கண்காணித்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள், போலீஸ் நிலையங்களுக்கு விரைந்து தகவல் தெரிவிப்பார்கள்.
வாட்ஸ் அப் நம்பர்
மாநகர போலீசாரின் புதிய ‘வாட்ஸ் அப்' போன் நம்பர் 8300021100 மூலம் பொதுமக்கள் குறைகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். இதில் தகவல் தெரிவிக்கும் போன் எண்கள் ரகசியமாக வைக்கப்படும்.
ஃபேஸ்புக் வசதி
ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் வசதிக்காக மதுரை காவல்துறை ஃபேஸ்புக்கை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றம் அல்லது போக்குவரத்து சம்பந்தமான முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.
ஐடியா எப்படி வந்தது?
அது என்ன ‘எஸ்.ஓ.எஸ்' என்று கேட்பவர்களுக்கு ஒரு கப்பல் கதையைச் சொல்கிறார் கமிஷனர் சைலேஷ் குமார். நடுக்கடலில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் கப்பல் ஒன்று, திடீர் என்று வந்த புயலாலோ, எரிபொருள் இல்லாததாலோ அல்லது வேறு ஏதாவது காரணத்தினாலோ நிலை தடுமாறி, தகவல்தொடர்புகள் துண்டிக்கப்பட்டு செயல் இழந்து மூழ்கும் நிலையில் இருந்தது. அந்தக் கப்பலில் இருப்பவர்களுக்கு அங்கு உதவ யாரும் இல்லை. ஆபத்து நிலையில் இருந்த பயணிகள் என்ன செய்வார்கள்? தங்களை எப்படி காப்பாற்றிக்கொள்வார்கள்? யோசித்த அவர்கள், ‘மூழ்கும் கப்பலில் இருக்கும் எங்களைக் காப்பற்றுங்கள்' (SAVE OUR SHIP) என்று ஒரு சிறிய காகிதத் துண்டுச்சீட்டுகளில் எழுதி, காலியாக வைத்து இருந்த பாட்டில்களுக்குள் அதை அடைத்து நடுக்கடலில் தூக்கி வீசினார்கள். காற்றின் வேகத்தில் அலை அடித்து அதில், ஒரு பாட்டிலை கரையில் சேர்த்தது. காகிதத்தால் அடைக்கப்பட்டு இருந்த பாட்டிலைப் பார்த்த ஒரு நபர், அதை எடுத்துப் பிரித்து, படித்து நிலைமையைப் புரிந்துகொண்டு உடனடியாக மீட்புக் குழுவுடன் இணைந்துசென்று கப்பலோடு மூழ்கும் நிலையில் இருந்த அந்த மக்களின் உயிர்களைக் காப்பாற்றினார்.
ஆபத்தான நிலையில்
இந்தக் கதையைப்போலத்தான் ஆபத்தான நிலையிலோ, கத்தி முனையிலோ, அரிவாள் முனையிலோ அல்லது துப்பாக்கி முனையிலோ எதிரிகளிடம் மாட்டிக்கொண்டால் அதிலிருந்து தப்பிக்கவே இந்த SAVE OUR SOUL என்கிற ‘எங்கள் ஆன்மாவைக் காப்பாற்றுங்கள்' என்ற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம்.
எஸ்.ஓ.எஸ் ஆப்ஸ்
நம்முடைய ஸ்மார்ட் போன் மூலம் வழக்கமாக கூகுள் ப்ளே ஸ்டோரில் போய், ‘மதுரை சிட்டி போலீஸ்' என்று அழுத்தினால் ஒரு அப்ளிகேஷன் வரும். அதை டவுன்லோடு செய்து உங்கள் மொபைலில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில், முதலில் ‘SOS' என்ற ஆப்சன் இருக்கும். அடுத்தபடியாகப் புகார் பதிவு என்ற ஆப்ஷன் இருக்கும். அதைத் தொடர்ந்து மதுரையில் உள்ள காவல் நிலையங்களின் எண்கள், அனைத்து அதிகாரிகளின் மொபைல் நம்பர் போன்ற எல்லா விவரங்களும் இருக்கும். மேலும், எங்களைப் பற்றிய கூடுதல் விவரங்கள் அடங்கிய ஆப்ஷனும் இருக்கும். இருந்த இடத்திலேயே யாருடன் வேண்டுமானாலும் பேச எல்லா வசதிகளுடன் இந்த சாஃப்ட்வேர் பக்கம் வடிமைக்கப்பட்டு இருக்கிறது.
தொட்டால் சிக்னல் வரும்
அதில் நாங்கள் கொடுத்து இருக்கும் எஸ்.ஓ.எஸ் ஆப்ஷனை அழுத்தினால் போதும். அது, உடனடியாக எந்த எண்ணில் இருந்து, எந்த ஏரியாவில் இருந்து அழுத்தினார்கள் என்ற விவரங்களை எங்களுக்குத் தெரிவித்துவிடும். அந்த முதற்கட்ட தகவலை வைத்துக்கொண்டு அருகில் இருக்கும் காவல் துறை அதிகாரிகளிடம் சொல்லி உடனடியாக அங்கு என்ன பிரச்னை என்று பார்க்கச் சொல்லி அனுப்பிவிடுவோம். ஒருவேளை, வீட்டில் தனியாக இருக்கும் பெண்ணிடம் நகையைப் பறிக்கவோ அல்லது வேறு ஏதாவது அசம்பாவிதமாக சம்பவம் நடைபெறப் போகிறது என்று அவர் உணர்ந்தால், பாதிக்கப்பட்டவரால் போனில் எங்களுக்குத் தகவல் சொல்ல முடியாத நிலையில் இருந்தால், இந்த ஆப்ஷனைத் தொடர்ந்து அழுத்திப் பயன்படுத்தினால், அடுத்த 10 நிமிடங்களில் போலீஸ் அங்கு இருக்கும்.
மும்பைதான் முன்மாதிரி
மும்பை காவல் துறை இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தது. அதில் கொஞ்சம் மாறுதல் செய்து கூடுதல் வசதியுடன் இந்தத் திட்டத்தை மதுரை காவல்துறையினரால் தொடங்கப்பட்டுள்ளதாம். இந்த டிஜிட்டல் திட்டம் ஆரம்பித்து இரண்டு நாட்களுக்குள் 74 புகார்கள் வந்ததாம். அதில் 64 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாம் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்று இந்தத் துறைக்கே தனியாக ஒரு டீம் அமைத்து அதை கமிஷனரும் கண்காணித்து வருகிறாராம். புகார் கொடுத்தவரின் ரகசியம் காக்கப்படுகிறது என்பதுதான் இதன் சிறப்பம்சம்.
மாவட்ட தலைநகரங்களில்
இந்த எஸ்.ஓ.எஸ் திட்டத்தை மதுரையில் மட்டுமல்லாது தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கொண்டு வருவதன் மூலம் பெண்களுக்கு எதிரான பலவித குற்றங்களை தடுக்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். குறிப்பாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தினசரி நகைப்பறிப்பு, திருட்டு, தனியாக இருக்கும் பெண்கள் கொலை செய்யப்படுவது தடுக்கப்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.